Skip to content

கத்தரியில் குருத்து மற்றும் காய் துளைப்பான் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை

கத்தரி, சோலானம் மெலான்சினா தெற்காசியாவின் மூன்று முக்கிய காய்கறி பயிர்களில் ஒன்றாகும், இது உலகின் பரப்பளவில் கிட்டத்தட்ட 50 சதவிகிதம் சாகுபடி செய்யப்படுகின்றது. உலகளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக, கத்தரிக்காய் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடம் வகிக்கின்றது.

இது இந்தியாவில் வணிக மற்றும் தோட்டப்பயிராகவும் வளர்க்கப்படுகிறது. இது ‘காய்கறிகளின்அரசன்’ என்றும் ‘ஏழைகளின் காய்கறி’ என்றும் அழைக்கப்படுகின்றது. 35 க்கும் மேற்பட்ட பூச்சி இனங்களால் கத்திரி பயிர், நாற்றங்காலில் இருந்து அறுவடை வரை தாக்கப்படுகிறது. இவற்றில், கத்தரிக்காய் குருத்து மற்றும் காய் துளைப்பான், லியூசினோடஸ் ஆர்போனாலிஸ், 50-90 % அளவில் கத்திரி பயிரில் பெரும் பொருளாதார சேதத்தை ஏற்படுத்துகிறது. எந்த ஒரு பயிர்பாதுகாப்பு முறைகளையும் பின்பற்றாத போது 90% மேல் பொருளாதார சேதத்தை ஏற்படுத்துகிறது. கத்தரி  பயிரின் இன்றியமையாமையை  கருத்தில் கொண்டும்  , கத்தரியின்  குருத்து மற்றும் காய் துளைப்பான்  அந்திப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டியதன்  அவசியத்தாலும் இவற்றின் வாழ்க்கை  சுழற்சி மற்றும் எளிய ஒருங்கிணைந்த  பூச்சி  மேலாண்மை  முறைமைகளும்  இக்கட்டுரையில்  தொகுக்கப்பட்டுள்ளன.

வாழ்க்கைச்  சுழற்சி

ஒரு பெண் அந்துப்பூச்சி 80 முதல் 253 வரையிலான சிறிய, ஒற்றை,  மங்கிய  வெள்ளை  நிற முட்டைகளை இலைகளின் அடிப்புறம் , வளரும் இளம்  குருத்துகள், பூ மொட்டுகள் மற்றும் காய்கள் செடியுடன் இணைந்திருக்கும் பகுதி   முதலியவற்றில் இடுகிறது. முட்டைப்  பருவம் கோடையில் 3 முதல் 5 நாட்கள் மற்றும் குளிர்காலத்தில் 7 முதல் 8 நாட்கள்  வரையில் இருக்கும், பின்னர்   முட்டையிலிருந்து  கருப்பு தலை கொண்ட வெள்ளை நிற முதல் நிலை  புழுக்கள்  வெளிவரும். புழுப் பருவம்  12 முதல் 15 நாட்கள் வரை கோடையிலும்,  மற்றும் 14 – 22 நாட்கள் வரை குளிர்காலத்திலும், ஐந்து முதல் ஆறு நிலைகளில் இருக்கும். முதிர்ந்த புழுக்கள்  மஞ்சள்  கலந்த இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும், அவை பாதிக்கப்பட்ட  இளம்  தண்டு  மற்றும்  காய்களில்  இருந்து வெளியேறி  மற்றும் காய்ந்த தளிர்கள் மற்றும் இலைகள்  அல்லது மண்ணில்  கூட்டுப்புழுவாகிறது. இவை மண்ணில் 1 முதல் 3 செமீ ஆழத்தில் கூட்டுப்புழுவாகின்றன. கோடை காலத்தில் கூட்டுப்புழுப் பருவம்   7 ​​முதல் 10 நாட்கள் வரை இருக்கும், அதே நேரத்தில் குளிர்காலத்தில் 13 முதல் 15 நாட்கள் வரை நீடிக்கும். கூட்டுப்புழுக்களிலிருந்து வெளிவரும் அந்திப்பூச்சிகள் பொதுவாக  பகல் நேரத்தில் இலைகளின் அடிப்புறத்தில்  தாவர விதானத்திற்குள் மறைந்து காணப்படும் . அந்திப்பூச்சிகள் வெள்ளை நிறத்திலும், முன் இறக்கைகளில் ஒழுங்கற்ற வடிவத்தில்  புள்ளிகளுடன்  இருக்கும். அந்திப்பூச்சிகள் முட்டையிடும் முன்  1.2 முதல் 2.1  நாட்கள் மற்றும்  அவை  முட்டையிட்ட பின்னர் 1.4 முதல் 2.9 நாட்கள் வரை  உயிரோடிருக்கும். ஆண் அந்துப்பூச்சிகள் இனச்சேர்க்கைக்குப் பிறகும் மற்றும் பெண் அந்துப்பூச்சிகள் முட்டையிட்ட பின்னரும் இறந்து விடுகின்றன. காலநிலைகளைப்   பொருத்து  இவற்றின் வாழ்க்கை  சுழற்சி  17 முதல் 50 நாட்கள்  வரை  நீடிக்கின்றன.

பயிர் சேதத்தின் அறிகுறிகள்

கத்தரிக்காய் குருத்து மற்றும் காய் துளைப்பான் புழுப் பருவத்தில், பயிருக்கு  சேதம் விளைவிக்கின்றது. முதல் நிலை புழுக்கள் முட்டையிலிருந்து  வெளிவந்தவுடன், வளரும் தளிர்கள், மலர் மொட்டுகள் மற்றும்  காயானது  செடியுடன்  இணைந்திருக்கும் பகுதிகளிலுள்ள மென்மையான பாகங்களை சுரண்டி உட்புற திசுக்களுக்குள் நுழைகின்றன. இப்பூச்சியால் தாக்கப்பட்ட  இளம்  குருத்துகள்  முதலில் வாடி தொங்கும் பின்னர்  அவை காய்ந்துவிடும். இவை மலரின் மொட்டுகளைத் துளைத்து  உண்ணுவதால் மொட்டுகள் உதிர்ந்து மகசூல் குறைகின்றது. இவை காய்களில் துளையிட்டு உள்ளே சென்று, உட்புற திசுக்களை  உண்ணுகின்றன  மேலும் இத்துளைகளின்  வழியே கழிவுப் பொருட்களை வெளியேற்றி துளைகளை அடைகின்றன, இதனால் காய்களின் விற்பனை தரத்தை இப்பூச்சிகள்  குறைக்கின்றன. மேலும் இதன் விளைவாக கத்தரி காய்களின் வைட்டமின் ‘சி’   மற்றும்  பிற சத்துக்கள் 80 சதவீதம் வரை இழக்கப்படுகிறது.

ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை

  • ஒவ்வொரு பருவத்திலும் தொடர்ந்து கத்தரிக்காய் பயிர் செய்வதைத் தவிர்க்கவும்
  •  ஒரே  பருவத்தில் பெரும் பரப்பில்   கத்தரி  பயிரிடும்  போது  அவற்றின் சேத அளவை  குறைக்கலாம்
  • இப்பூச்சி ஆனது கத்தரி தவிர தக்காளி, மிளகாய், உருளைக்கிழங்கு போன்ற பிற சோலானேசியே குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்களிலும் வளரும் தன்மை கொண்டது. ஆகையால் இத்தகைய பயிர்களை கத்தரி அருகில் பயிரிடக்கூடாது
  • இப்பூச்சியை கட்டுப்படுத்த குறிப்பிடத்தக்க எதிர்ப்புத்திறன் கொண்ட எந்த ஒரு கத்தரி ரகங்களும் இதுவரை உருவாக்கப்படவில்லை. பாதிப்பு  அதிகம் உள்ள பகுதிகளில் நீண்ட குறுகிய கத்தரிக்காய் ரகங்களை தெரிந்தெடுத்து வளர்க்கலாம்
  • கத்தரி பயிரில் பெருஞ்சீரகம் மற்றும் கொத்தமல்லியை ஊடுபயிராக பயிரிடலாம்
  • நாற்றுகளை நடவு செய்வதற்கு முன், இமிடாக்குளோப்ரிடில் 1 மி.லி/லிட்டர் தண்ணீரில் கத்தரி நாற்றுகளை நனைத்து நாற்றுகளை நேர்த்தி செய்யலாம்.
  • முதிர்ந்த அந்திப் பூச்சிகளைப் கவர்ந்து அழிக்க வயலில், ஏக்கருக்கு @ 4-5 இனக்கவர்ச்சி நீர்ப்பொறிகளை பயிர் மட்டத்தில் பொருத்த வேண்டும் மேலும்  15 நாட்களுக்கு ஒருமுறை புதிய தரமான இனக்கவர்ச்சி குப்பிகளை மாற்ற வேண்டும்
  • இரவு நேரங்களில் 1-2/ ஏக்கர் என்ற அளவில் விளக்குப் பொறிகளை வைத்து அந்திப்பூச்சிகளைப் கவர்ந்து அழிக்கலாம்
  • இப்பூச்சியால் சேதமடைந்த வாடிய நுனிக்குருத்துகள் மற்றும் துளையுடன் கூடிய காய்களையும் சேகரிக்கப்பட்டு அவற்றை தீயிட்டு அல்லது நிலத்தில் புதைத்து உடனடியாக அழிக்க வேண்டும்
  • ட்ரைகோகிராம்மா சிலோனிஸ் முட்டை ஒட்டுண்ணிகளை 0.5 லட்சம் முட்டைகள் /ஏக்கர் என்ற அளவில் வயலில் விட வேண்டும்
  • பேசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் குர்ஸ்டாக்கி என்ற பாக்டீரிய நுண்ணுயிர் பூச்சிக்கொல்லியை பாதிக்கப்பட்ட வயலில் தெளிக்கலாம்
  • செயற்கை பைரித்ராய்டு பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்
  • பின்வரும் ரசாயனப் பூச்சிக்கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை நடவு செய்த ஒரு மாதத்திலிருந்து 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்கவும்-
  • எமாமெக்டின்பென்சோயேட் 5% SG 80 கிராம் / ஏக்கர் @ 0.4 கிராம் / லிட்டர் தண்ணீர்
  • குளோராண்ட்ரானிலிப்ரோல் 18.5% SC 80 மிலி /ஏக்கர் @ 0.4 மிலி /எல் தண்ணீர்
  • ஸ்பைனிடோரம் 11.7% SC 200 மிலி / ஏக்கர் @ 1 மிலி/ லிட்டர் தண்ணீர்
  • ஃப்ளுபெண்டியமைட்  20% WDG 150 கிராம்/ ஏக்கர் @ 0.75 கிராம்/ லிட்டர் தண்ணீர்
  • அசாடிராக்டின் 0.03% WSP (300 ppm) – 5 கிராம் / லிட்டர் தண்ணீர்
  • இப்பூச்சிகள் ரசாயனப் பூச்சிக் கொல்லிகளுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளுவதை தவிர்க்க பூச்சிக் கொல்லிகளை சுழற்சி முறையில் உபயோகப்படுத்தலாம்
குருத்து வாடல் காய்  துளைகள்
புழுக்களால் குருத்து  சேதமடைதல்
 
அந்திப் பூச்சி

 

கட்டுரையாளர்.

இரா.பியூலாபாக்யஷெர்லின் 1,  ஜி. இரவி 2 மற்றும் பால கிருஷ்ணன் 2, முனைவர், முதுநிலை ஆராய்ச்சியாளர்1, பேராசிரியர் 2, வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கிள்ளிகுளம். மின்னஞ்சல்: beulahwhite@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj