Skip to content

சிப்பிக் காளான்- சாகுபடி முதல் சந்தைப்படுத்தல் வரை (பகுதி-1)

காளான் வளர்ப்பு அறிமுகம்:

மனிதர்கள் காளான் வகைகளை அதிகம் விரும்பி உண்ணத் தொடங்கிவிட்டார்கள். காரணம் அசைவ சுவைக்கு நிகரான சுவையை இது தருவதால்தான். சிப்பிக் காளான் 20-35% புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் செலினியம் போன்ற பிற ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த மூலமாகும், இது நாள்பட்ட நோய்களால் ஏற்படும் சேதங்களிலிருந்து, உடல் செல்களைப் பாதுகாக்கிறது மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. சிப்பிக் காளான் கலோரிகளில் குறைவாகவும், கொழுப்பு இல்லாத,  பசையம் இல்லாததாகவும், சோடியம் மிகக் குறைவாகவும் உள்ளது.

மேலும் இதில் பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம், ஃபோலிக் அமிலம் வைட்டமின்கள் B1, B3, B5 & B12 வைட்டமின் C & வைட்டமின் D மற்றும் காப்பர் போன்ற தாதுச் சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. உடலுக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தும் சரிவிகிதத்தில் கலந்திருப்பதால் இது ஒரு சரிவிகித உணவாகவும் இருக்கிறது.  இதை மருத்துவர்கள் சிபாரிசு செய்கிறார்கள். மேலும் இதன் முக்கியமான மருத்துவ குணம் சர்க்கரை வியாதி, புற்றுநோய், இதய நோய்களை கட்டுக்குள் வைக்க உதவுகிறது மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் குணமுடையது.

காளான் ரகங்கள்

நம் காலநிலைக்கு உகந்த ரகங்கள்: வெள்ளைச்சிப்பி (கோ-1), சாம்பல் சிப்பி (எம்-2), ஏ.பி.கே -1 ( சாம்பல் சிப்பி), எம்.டி.யு -2 இளஞ்சிவப்பு சிப்பி, ஊட்டி 1 ஆகியன காளான் தமிழ்நாட்டிற்கு ஏற்றவை ஆகும்.

காளான் குடில் அமைப்பது:

16 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட ஒரு கொட்டகை தேவை. கூரைவேய்ந்த சாதாரண வீடே போதுமானது. இதில் இரண்டு பகுதிகளாக பிரித்துக்கொள்ள வேண்டும். ஒன்று வித்து பரப்பும் அறையாகவும், மற்றொன்று காளான் வளர்க்கவும் தேவைப்படும்.

வளர்ப்பு அறையின் வெப்பநிலை 23-25oC இருக்க வேண்டும். வித்து பரப்பும் அறையின் வெப்பநிலை 25-30oC வெப்பம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அத்தோடு இந்த இரு அறைகளிலும் இருட்டு இல்லாமல், நல்ல காற்றோட்டத்தோடு இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். குடிலினுள் 75-80% ஈரப்பதமும் இருக்க வேண்டும்.

காளான் வித்து உருவாக்குவது எப்படி?

மக்காச்சோளம், கோதுமை, சோளம் ஆகியவைகள் காளான் வித்து உருவாக்க ஏற்ற தானியங்கள் ஆகும். தானியங்களை அரை வேக்காடு வேகவைத்து காற்றில் உலர்த்த வேண்டும். அதனுடன் (1 கிலோ தானியத்திற்கு) 20 கிராம் கால்சியம் கார்பனேட்டை கலக்கவும். முழுமையான கலவையை உறுதி செய்யுங்கள். காலியாக உள்ள குளுக்கோஸ் பாட்டில்களில் தானியங்களை முக்கால்வாசி உயரம் வரை நிரப்ப வேண்டும். அடுத்து ஒரு தண்ணீர் உறிஞ்சாதப் பஞ்சை கொண்டு அடைக்க வேண்டும்.

அடுத்து அதிலுள்ள நுண்கிருமிகளை அழிக்க குக்கரில் அடுக்கி 2 மணிநேரம் வேகவைக்க வேண்டும். வேளாண் பல்கலைக் கழகம் அல்லது வேளாண் துறை உற்பத்தி செய்த தூய்மையான தாய் காளான் வித்தை  (Mother spawn) தானியம் நிரப்பப்பட்ட குளுக்கோஸ் பாட்டிலில் கலந்து, சாதாரண வெப்ப நிலையில் 15 நாட்கள் தனியாக வைக்க வேண்டும். பிறகு 15-18 நாட்கள் வயதுடைய காளான் வித்தை காளான் தயாரிப்புக்கு பயன்படுத்த வேண்டும். ஒரு தாய் ஸ்பான் பாட்டிலில் இருந்து 30 ஸ்பான் பாட்டில் தயாரிக்கலாம்.

தாய் ஸ்பானிலிருந்து புதிய பாட்டில்களுக்கு இரு நபர்கள் இனாக்குலத்தை மாற்ற வேண்டும். ஒரு நபர் தனது இடது கையில் ஸ்பான் பாட்டிலைப் பிடித்து, வலது கையால் பருத்தி பிளக்கைத் திறக்க வேண்டும்.

ஒரு 5 மிமீ இரும்பு கம்பியின் உதவியுடன், பூஞ்சை வளர்ச்சியுடன் தனிப்பட்ட தானியங்களைப் பெற ஸ்பான்ஸை அசைக்கவும். இரண்டாவது நபர், இப்போது அதே வழியில் சோளம் தானியங்களைக் கொண்ட கிருமி நீக்கம் செய்யப்பட்ட பாட்டிலை திறக்க முடியும். சுமார் 20 -25 தானிய ஸ்பான் பாட்டிலுக்கு மாற்றப்படுகிறது.

பாட்டில் உடனடியாக பஞ்சு அடைப்பான் (Cotton plug) செருகப்பட்டு பின்னர் அறை வெப்பநிலையில் சுமார் 15 நாட்கள் அடைகாக்கப்பட்டு, மைசீலியம் வளர அனுமதிக்கிறது.

(குறிப்பு: இத்தனை சிரமங்களை தவிர்க்க இப்போது காளான் வித்துக்களையும் விற்பனை செய்கிறார்கள். நல்லதரமான காளான் வித்துக்களை வாங்கி உபயோகிக்கலாம்.)

-தொடரும்….

கட்டுரையாளர்:

செல்வி. சௌந்தர்யா காசிராமன், முனைவர் பட்டப்படிப்பு ஆராய்ச்சி மாணவி, தாவர நோயியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,

மின்னஞ்சல் : soundaryakasiraman@gmail.com

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nv-author-image

editor news

error: Content is protected !!