Skip to content

முறைகேடுகளை தடுக்க விவசாயிகள் உரம் வாங்க ஆதார் கட்டாயம்!

விவசாயிகள் உரம் வாங்க ஜனவரி 1-ம் தேதிமுதல் ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் ரபி பருவமான அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலக்கட்டத்தில் 12 லட்சத்து 95 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்படும். இந்த ஆண்டு மழைப்பொழிவு எதிர்பார்த்தபடி இல்லாததால் இதுவரை 10 லட்சத்து 47 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதேபோல, சிறுதானியங்கள், பயறு வகைகள், பருத்தி, கரும்பு, எண்ணெய் வித்துக்களும் குறைவாகவே சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், ரபி பருவத்துக்குத் தேவையான அளவுக்கு யூரியா, டிஏபி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் ஆகிய உரங்கள் இருப்பு உள்ளதாகவும், வரும் ஜனவரி 1-ம் தேதிமுதல் உரம் வாங்க விவசாயிகளுக்கு ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது என்றும் வேளாண் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:

உர மானியத்துக்காக மத்திய அரசு ஆண்டுதோறும் ரூ.75 ஆயிரம் கோடி ஒதுக்குகிறது. உர விற்பனையில் அனைத்து நிலைகளிலும் முறைகேட்டைத் தடுப்பதன் மூலம் இத்தொகையை ரூ.25 ஆயிரம் கோடியாகக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி, உர விற்பனையில் ஆன்லைன் மூலம் ரசீது வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேக மென்பொருள் தயாரித்து, ‘பாயின்ட் ஆஃப் சேல் டிவைஸ்’ விற்பனைக் கருவியையும் மத்திய அரசு இலவசமாக வழங்கியுள்ளது.

தமிழகத்தில் 4,146 கூட்டுறவு கடைகள், 8,073 தனியார் கடைகள் மூலம் உரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மொத்தம் உள்ள 12,219 கடைகளில் இதுவரை 10,415 கடைகளுக்கு இந்தக் கருவி வழங்கப்பட்டுவிட்டது. மற்ற கடைகளுக்கும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் வழங்கப்பட்டுவிடும்.

ஜனவரி 1-ம் தேதிமுதல் இந்த கருவியில்தான் ரசீது போட வேண்டும் என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதில், ரசீது போட ஆதார் எண் கட்டாயம்.

எனவே, ஆதார் அட்டை வைத்திருக்கும் விவசாயிகள் மட்டும்தான் ஜனவரி 1 முதல் உரம் வாங்க முடியும். ஆதார் இல்லாத விவசாயிகளுக்கு உரம் வழங்க இயலாது. இதன்மூலம், உரத்தை அதிக விலைக்கு விற்பது, பதுக்குவது, விவசாயிகள் அல்லாதவர்கள் உரம் வாங்குவது ஆகிய முறைகேடுகள் முற்றிலுமாகத் தடுக்கப்படும்.

தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி, யூரியா 1 லட்சத்து 55 ஆயிரம் டன், டிஏபி 85 ஆயிரம் டன், பொட்டாஷ் 72 ஆயிரம் டன், காம்ப்ளக்ஸ் 1 லட்சத்து 46 ஆயிரம் டன் என மொத்தம் 4 லட்சத்து 58 ஆயிரம் டன் உரங்கள் இருப்பு உள்ளன. தேவையான அளவு உரம் இருப்பு இருப்பதாலும், போதிய அளவுக்கு உரம் வழங்க மத்திய அரசு தயாராக இருப்பதாலும் இந்த ஆண்டு உரத் தட்டுப்பாடு ஏற்படாது என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj