Skip to content

செஞ்சந்தன மரம்

அணுக்கதிர் எதிர்ப்பு

விஞ்ஞானப் பெயர் : Pterocarpus santalinus (Papilionaceae)

சமஸ்கிருதம் : ரக்தசந்தனா

ஹிந்தி : லால் சந்தன்

ஆங்கிலம் : Red Sanders

தமிழ் : சந்தன வேங்கை (மறு பெயர்)

ஒரே மொழியில் ஒரே மரத்துக்குப் பல பெயர்கள் உண்டு. பல மரங்களுக்கு ஒரே பெயர் உண்டு. ஆகவேதான் உலகப் பொதுமொழியாக தாவரவியல் பாடத்துக்கு லத்தீன் மொழி வழக்கு கையாளப்படுகிறது. இதன் மூலம் தமிழ் விஞ்ஞானியும் இந்திய விஞ்ஞானியும் லத்தீன் பொது வழக்கைக் கொண்டு சரியான தாவரத்தை அல்லது மரத்தைச் சரியானபடி அடையாளம் கண்டுகொள்ள எளிதாகிறது. செஞ்சந்தனத்தின் லத்தீன் தாவரவியல் பெயர் டிரோகார்ப்பஸ் சந்தாலினஸ் (Pterocarpus santalinus).

கன்று விற்பவர்கள் செல்வம் கொழிக்கும் செஞ்சந்தனம் என்று விளம்பரம் செய்து. ஒரு கன்று ரூ. 100 என்று கூட விற்று விடுவதுண்டு. சித்தையன்கோட்டை ஆத்தூர் ராமசாமிக்கு சந்தன வேங்கை என்றால் புரிகிறது. செஞ்சந்தனம் என்றால் புரியவில்லை. இரண்டும் ஒன்றுதான். அவர் ரூ. 5/-க்கு ஒரு கன்றை வழங்குகிறார்.

பழைய பைபிள் கதையில் அழுக்காயிருந்த சினாய் ஏரியில் மோசஸ் ஒரு கம்பை வீசியெறிந்து நீர் தூய்மையானதாகச் சொல்லப்பட்டிருக்கிறது அல்லவா? மோசஸ் கையில் இருந்த அந்த அபூர்வமான அதிசயக் கம்பு செஞ்சந்தனமாகும். இதில் அப்படி என்ன அதிசயம்? அம்மரம் அணுக்கதிர் வீச்சை எதிர்தாங்கிக் கொள்ளும். இது அணுயுகம். இந்த மரம் தென்னாட்டில் மட்டுமே அதிகம்.

அபின், கஞ்சா கடத்துவது போல் சித்தூர், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, கர்நூல், கடப்பா பிராந்தியங்களில் உள்ள மலைப் பகுதிகளில் ஒரு காலத்தில் மிகுந்து விளங்கிய முதிர்ந்த மரங்கள் எல்லாம் வெட்டிக் கடத்தப்பட்டுவிட்டன. கடத்தியவர்கள் எல்லாம் கோடீஸ்வரர்களாகிவிட்டனர். ஜப்பானில் உள்ள பெரிய அணு உலைகளில் நம்மூர் சந்தன வேங்கை மரத்துக்கு இவ்வளவு கிராக்கி ஏற்பட்டுள்ளது.

இன்று இந்தச் செஞ்சந்தனம் என்ற சந்தன வேங்கை அரிதாகிவிட்டாலும் விரைவில் பணக்காரராகிவிடலாம் என்ற எண்ணத்தில் பல விவசாயிகள் கூடுதல் விலை கொடுத்துக் கன்று வாங்கி நட்டுள்ளனர். இவர்கள் அறியவேண்டிய விஷயம் என்னவெனில், சந்தனத்தைப் போல் இது வேகமாக வளராது. வேங்கையைப்போல் அடிமரமும் வேகமாகப் பெருக்காது.

அன்பளிப்பாக எனக்குக் கிடைத்த ஒரு மரத்தை நட்டு நான்கு வருடமாகிறது. உடன் நட்ட சந்தனம் 20 அடி உயரம் வளர்ந்துள்ளது. இதுவோ 9 அடி தான் வளர்ந்துள்ளது. இதன் இயல்புப்படிதான் இது வளரும். நன்கு முதிர்ந்த மரம் கூட 3 அடிக்கு மேல் பருமன் வராது. உயரம் 40 அடி வளர்ந்தால் பெரிய காரியம். இந்த மரத்தின் சிறப்பு இதன் கடினத்தன்மை. ஒரு கன மீட்டர் மரத்தின் எடை 1 டன் வளரும். வைரப்பகுதி அதிகம். ஆகவே இதன் விலையும் வைரம்போல் விற்கலாம். காயக்காய இதன் கடினத்தன்மை கூடுவதால் இது அணுக்கதிர் வீச்சை உள் வாங்கினாலும் மரம் பழுதுபடாதாம். கரையான் அரிக்காது. ஒலி அலையைத் தடுக்கும் திறன் கொண்டது. வெப்பத்தைக் கடத்தாது. வறண்ட புதர்க்காடுகளில் இது சிறப்பாக வளர்கிறது.

இம்மரத்தூளை நைஸாக அரைத்து, நறுமணமூட்டிகளாகத் துணிப்பையில் 50 கிராம் போட்டு வைத்தால், பூச்சி வராது. சந்தனத்துக்குரிய குணம், மணம் எல்லாம் சந்தன வேங்கைக்கும் உண்டு. இது சந்தன மரத்தை விடக் கடினமானது.

இவ்வளவு விஷயங்கள் இந்த மரத்தில் இருப்பினும் கூட, மாவட்டம் தோறும் உள்ள வன விரிவாக்க மையங்களில் விசாரித்தால், சைமா ரூபா தருகிறேன், சிசு தருகிறேன் என்பார்கள். சந்தனம் இருக்காது, செஞ்சந்தனம் இருக்காது. தனியார் நர்சரிகளில்தான் வைத்துள்ளனர். இருப்பினும் செஞ்சந்தன மரம் விநியோகிக்கும் கருணாநிதி மட்டும் ஒரு கன்று 10 ரூபாய்க்குத் தருவார். சிலருக்கு இலவசமாகவும் மரம் வழங்கும் கருணாநிதி விழுப்புரம் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர். இவரிடம் செஞ்சந்தனம் தவிர, வேறு பலவகை ராசிச் சிறப்பு – நட்சத்திரச் சிறப்புள்ள அரிய மரங்களும் கிட்டும். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் செஞ்சந்தன நெற்று கிட்டும்.

மலைப்பகுதிகளில் சில முதிர்ந்த மரங்களை விட்டு வைத்துள்ளார்கள். சில வனத்துறை அலுவலர்களிடம் அனுமதி பெற்று விதைகளைச் சேகரித்து நாற்றுப் போடலாம். சந்தன வேங்கையின் கீழ் கன்றுகளும் வரும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.

தமிழ்நாட்டில் கல்பாக்கம் அணுஉலை அச்சுறுத்தல் உள்ளது. கூடவே கூடங்குளமும் பயமுறுத்துகிறது. செஞ்சந்தன மரங்களை வளர்த்து நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயமும் உள்ளது. சந்தன மரத்துக்குச் சொல்லப்பட்ட எல்லா மருத்துவக் குணங்களும் இதற்கும் உண்டு. செஞ்சந்தன மரக்கன்று கிடைக்கும் முகவரி:

திரு. ராமசாமி

பழனி மலைப் பாதுகாப்புக் கழகம், மரப்பண்ணை நர்சரி கன்னிவாடி – அஞ்சல், திண்டுக்கல் மாவட்டம் Cell: 98654-37876

3 thoughts on “செஞ்சந்தன மரம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj