Site icon Vivasayam | விவசாயம்

கருங்குறுவை சாகுபடி..!

நாற்பது சென்ட் நிலத்தில் கருங்குறுவை நெல் சாகுபடி..

கருங்குறுவை ரகத்தின் வயது 110 நாட்கள். இது, மோட்டா ரகம். நாற்பது சென்ட் நிலத்தில் சாகுபடி செய்ய 5 சென்ட் நிலத்தில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். நாற்றங்காலுக்கான நிலத்தில் 2 சால் சேற்றுழவு செய்து எருக்கன், ஆடாதொடை, புங்கன், வேம்பு நொச்சி இலைகள் ஆகியவற்றைக் கலந்து 50 கிலோ அளவில் போட்டு காலால் மிதிக்க வேண்டும். ஒரு வாரம் கழித்து, 50 கிலோ கனஜீவாமிர்தத்தைத் தூவி நிலத்தைச் சமப்படுத்த வேண்டும்.

மறுநாள், 5 கிலோ விதிநெல்லை மூன்றாம் கொம்பு விதையாக விதைக்க வேண்டும். காய்ச்சலும் பாய்ச்சலுமாகத் தண்ணீர்ப் பாய்ச்சி வர வேண்டும். விதைத்த 10-ம் நாள் 10 கிலோ கனஜீவாமிர்தத்தைத் தூவ வேண்டும். பதின்மூன்றாம் நாள் 100 மில்லி பஞ்சகவ்யாவை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். பதினெட்டாம் நாளில் முக்கால் அடி உயரத்துக்கு நாற்றுகள் வளர்ந்து நடவுக்குத் தயாராகிவிடும்.

சாகுபடி வயலில் 2 சால் சேற்றுழவு செய்து நிலத்தைச் சமப்படுத்தி, வரிசைக்கு வரிசை 40 சென்டிமீட்டர் இடைவெளியும், பயிருக்கு பயிர் 25 சென்டிமீட்டர் இடைவெளியும் இருக்குமாறு குத்துக்கு 2 நாற்றுகள் என நடவு செய்ய வேண்டும். தேவைப்பட்டால் அவ்வப்போது களைகளை அகற்ற வேண்டும். நடவு செய்த 3, 15, 30 மற்றும் 45-ம் நாட்களில், 50 கிலோ கனஜீவாமிர்தத்தைத் தூவிவிட வேண்டும்.

நடவு செய்த 5,17,32 மற்றும் 47-ம் நாட்களில், ஒன்றரை லிட்டர் பஞ்சகவ்யாவை 50 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து வர வேண்டும். இலைக்கருகல் நோயைத் தடுக்க, 60-ம் நாளன்று 10 கிலோ சாணம் கலந்த கரைசலில் 50 மில்லி சூடோமோனஸ் கலந்து தெளிக்க வேண்டும். தண்டு உருளும் பருவத்தில் 5 லிட்டர் தேமோர் கரைசலை 50 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். நடவிலிருந்து 92-ம் நாளுக்கு மேல் பயிர் அறுவடைக்குத் தயாராகிவிடும்.

மண்ணும் பட்டமும்

கருங்குறுவை ரகம் எல்லா வகையான மண்ணிலும் விளையும். குறுவை, சம்பா இரண்டு பட்டங்களுக்கும் ஏற்றது. இதன் பூர்வீகம் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் எனச் சொல்லப்படுகிறது. சோறு மற்றும் கஞ்சிக்கு சிறப்பாக இருக்கும். அரிசி, வெளிர் சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த அரிசியில், இரும்புச்சத்து நிறைந்துள்ளது,

ரத்தசோகை, குஷ்டம் ஆகிய நோய்களைக் குணப்படுத்தக்கூடியது என்று சித்த மருத்துவம் சொல்கிறது. இதுதவிரப் போக சக்தியை அதிகரிக்கும். நோய்வாய்ப்பட்டிருப்பவர்கள் இந்த அரிசியில் கஞ்சி வைத்து குடித்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

நன்றி

பசுமை விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Exit mobile version