Skip to content

பாமக-வின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை – 2017

பாமக கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தமிழக அரசுக்கு வழிகாட்டும் விதமாக நிழல்நிதிநிலை அறிக்கை வெளியிடுகிறது.

அதில் விவசாயத்திற்கு தனி பட்ஜெட் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடுகிறது.

இந்த ஆண்டின் பாமக வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை இன்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்கள் முன்னிலையில் வெளியிடபட்டது.

முக்கிய அம்சங்கள் – மொத்தம் 100 புள்ளிகளில்

1. 2017-18 ஆம் ஆண்டை உழவர்கள் தற்கொலை இல்லாத ஆண்டாக மாற்ற வேண்டும் என்பதே இந்த வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையில் நோக்கம் ஆகும். தமிழ்நாட்டில் விவசாயிகளின் தற்கொலைகளை தடுப்பற்காக கீழ்க்கண்ட அம்சங்களைக் கொண்ட சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

* வேளாண்மைக்குத் தேவையான அனைத்து இடுபொருட்களையும் இலவசமாக வழங்குதல்.
* வேளாண் விளைப்பொருட்களுக்கு நியாயமான விலை வழங்குதல்.
* கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்கவேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாகப் பெற்றுத் தருதல்.
* கூட்டுறவு வங்கிகளில் உழவர்கள் வாங்கிய பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்ட நிலையில், பொதுத்துறை வங்கிகளில் வாங்கிய கடன் சுமையிலிருந்தும் உழவர்களை விடுவித்தல்.
* இயற்கைச் சீற்றங்களால் விவசாயம் பாதிக்கப்படும்போது, அதன் பாதிப்பு விவசாயிகளைத் தாக்காத வகையில், பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தி இழப்பீடு வழங்குதல்.

2. இந்த நடவடிக்கைகள் மூலம் விவசாயிகள் தற்கொலைகளை தடுக்க முடியும் என்பது எங்கள் நம்பிக்கை. இதையும் தாண்டி வேளாண்மை சார்ந்த பாதிப்புகள் காரணமாக விவசாயிகள் எவரேனும் தற்கொலை செய்துகொண்டால், அது அரசின் தோல்வியாகக் கருதப்பட்டு, அந்த உழவரின் குடும்பத்திற்கு ரூ.5 கோடி இழப்பீடு வழங்கப்படும்.

3. 2016-17-ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியால் மாரடைப்பு ஏற்பட்டும் உயிரிழந்த 300-க்கும் கூடுதலான விவசாயிகளின் பட்டியல் மாவட்ட வாரியாக தயாரிக்கப்பட்டு, இம்மாத இறுதிக்குள் அரசிடம் தாக்கல் செய்யப்படும். அதன்பின் அடுத்த மாத இறுதிக்குள் அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் இழப்பீடு வழங்கப்படும்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு இழப்பீட்டுத் திட்டம்

4. வறட்சியால் உழவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளைப் போக்கும் வகையில் நிவாரணத் திட்டம் ஒன்றைச் செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன் விவரம் வருமாறு:

அ. வறட்சியால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25,000 வீதம் இழப்பீடு வழங்கப்படும்.

ஆ. கரும்புக்கு ஏக்கருக்கு ரூ.90,000 வீதமும், நிலக்கடலைக்கு ரூ.25,000 வீதமும் இழப்பீடு வழங்கப்படும்.

இ. பிற பணப்பயிர்களுக்கு அவற்றின் சந்தை மதிப்புக்கு ஏற்ப ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும்.

ஈ. நிலமற்ற ஏழைத் தொழிலாளர்கள், நிலம் இருந்தும் வறட்சி காரணமாக சாகுபடி செய்யாத சிறு, குறு விவசாயிகள் ஆகியோருக்கு ஒருமுறை உதவியாக ரூ.25,000 நிதியுதவி வழங்கப்படும்.

ஊ. வறட்சியால் பாதிக்கப்பட்ட உழவர்களின் கூட்டுறவுப் பயிர்க்கடன்கள் எந்த நிபந்தனையும் இன்றி முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.

பொதுத்துறை வங்கிக்கடன் தள்ளுபடி
5. பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களில், மூலதனக் கடன்கள் தவிர ரூ.22,000 கோடி பயிர்க்கடன்கள் மட்டும் தள்ளுபடி செய்யப்படும். இந்த தொகையை பொதுத்துறை வங்கிகளுக்கு வட்டியுடன் சேர்த்து 5 சம தவணைகளில் தமிழக அரசு வழங்கும்.

6. கூட்டுறவு வங்கிகள் மூலம் நடப்பு ஆண்டில் ரூ.12,000 கோடி கடன் வழங்கப்படும்.

7. கூட்டுறவு வங்கிகள் வழங்கும் பயிர்க்கடனுக்கு வட்டி விதிக்கப்படாது. அத்துடன் 15% மானியம் வழங்கப்படும். இதனால் ரூ. 1 லட்சம் கடன் பெற்றவர்கள் ரூ.85,000 செலுத்தினால் போதுமானது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி இல்லை

8. ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் நோக்கம் மற்றும் செயல்முறைகள் குறித்து உள்ளூர் மக்களிடம் கருத்து கேட்காமலேயே, அங்குள்ள பல ஏக்கர் நிலங்களை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கையகப்படுத்தி ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறது. இதற்கு 2008&ஆம் ஆண்டில் ஆட்சி செய்த திமுக அரசு அனுமதி அளித்துள்ளது.

9. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு நெடுவாசல் மக்களும், உழவர் அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்து வருவதால், இத்திட்டத்திற்கு அனுமதி அளிப்பதில்லை என்று தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. அரசின் இந்த முடிவு, மத்திய அரசுக்கு தெரிவிக்கப்படும்.

10. தமிழ்நாட்டில் எண்ணூர்- நாகப்பட்டினம், நாகப்பட்டினம் & மதுரை, நாகப்பட்டினம்- தூத்துக்குடி, திருவள்ளூர் -பெங்களூர் ஆகிய 4 வழித்தடங்களில் 1,175 கிலோமீட்டர் நீளத்திற்கு எரிவாயு குழாய்ப் பாதை அமைக்க இந்தியன் ஆயில் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. இத்திட்டத்தால் விளைநிலங்கள் பாதிக்கப்படும் என்பதால் இதற்கு அளிக்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படும்.

11. இத்திட்டத்தை மாற்றியமைத்து விளைநிலங்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் செயல்படுத்த இந்தியன் ஆயில் நிறுவனம் முன்வந்தால், அதற்கு அனுமதி தருவது குறித்து அரசு ஆராயும்.

12. கேரள மாநிலம் கொச்சியிலிருந்து, கர்நாடக மாநிலம் மங்களூருக்கு சேலம், கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்கள் வழியாக எரிவாயுக் குழாய் பாதை அமைக்கும் திட்டமும் வேளாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அத்திட்டத்தின் பாதையையும் மாற்றி அமைக்கும்படி மத்திய அரசை, தமிழக அரசு கேட்டுக்கொள்ளும்.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்

13. தமிழக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று காவிரிப் பாசன மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் ஆகியவையும், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்படும்.

14. இந்த மாவட்டங்களில் பூமிக்கு அடியில் மீத்தேன் உள்ளிட்ட எரிவாயுக்களும், கனிமங்களும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவற்றை எடுப்பதற்காக வேளாண் விளை நிலங்களை நாசமாக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் முயற்சிகள் முறியடிக்கப்படும்.

15. வேளாண் வருமானத்தை பெருக்கத் திட்டம்: உழவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.25,000 மானியம் வழங்குதல், நிலங்களின் அளவுக்கு ஏற்ப உறுதி செய்யப்பட்ட வருமானம் கிடைக்க வகை செய்தல், துல்லிய பண்னைத் திட்டத்தின் (Pricision Farming) மூலம் வருவாயை பெருக்குதல், உழவர்களுக்கு கடன் வழங்க நபார்டு வங்கியில் தனி அமைப்பை ஏற்படுத்துதல் ஆகியவை இதன் முக்கிய அம்சங்கள்.

16. வருவாய் வாய்ப்புகளை விரிவாக்க வேளாண்மையை மறுவரையறை செய்தல்: விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பு, மீன்வளர்ப்பு, கடலோரப்பயிர் வளர்ப்பு, பால்பொருள் உற்பத்தி, கோழி வளர்ப்பு ஆகியவற்றை செய்தல், தோட்டக்கலை பயிர்களை பயிரிடுதல், மதிப்பு கூட்டு பணிகளை செய்தல் ஆகியவற்றின் மூலம் வேளாண்மையை லாபம் தரும் தொழிலாக மாற்றுதல்.

17. வேளாண்மையை தொழில் வடிவமாக்குதல்: நவீன தொழில்நுட்பம், எந்திரமயமாக்கல், அறிவியல் அடிப்படையிலான பண்ணை மேலாண்மை ஆகியவற்றின் மூலம் அதிக விளைச்சல், சிறந்த தரம், தகுதியான விலை ஆகியவற்றுக்கு வழிகோலும் வகையில், வேளாண்மையை ஒரு தொழில்வடிவமாக்குவதே இந்த கொள்கையின் நோக்கம் ஆகும்.

18. தமிழகத்திற்கான நிலப் பயன்பாட்டுக் கொள்கை: சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் பெரு நிறுவனங்கள் நிலம் குவிப்பதைத் தடுப்பது, நிலங்களை பாதுகாக்கப்பட வேண்டிய பகுதிகள், சீரமைக்கப்பட வேண்டிய பகுதிகள், நிலைத்த ஆற்றல் வேளாண்மை(Sustainable Agriculture) செயல்பாட்டுக்கான பகுதிகள், தொழில்துறை பயன்பாடு மற்றும் வேளாண்மை சாராத பயன்பாட்டுக்கான பகுதிகள் என பிரித்தல், இவற்றில் கடைசி பகுதி தவிர மீதமுள்ள அனைத்துப் பகுதிகளையும் விவசாயத்திற்காக மட்டுமே பயன்படுத்துதல் ஆகியவை இதன் முக்கிய அம்சங்கள் ஆகும்.

19. முதல்நிலை வேளாண்மையை மாற்றியமைத்தல்: மண்வள நிலைகுறித்த வரைபடம் தயாரிக்கப்படும், சிறு&குறு நிலங்களின் மண்வளத்தை மீட்டெடுத்தல், அவற்றின் அடிப்படையில் எந்தப் பகுதியில் எந்தப் பயிரை அறிமுகப்படுத்துவது என்பதை தீர்மானித்தல் ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

20. விரிவாக்க செயல்பாடுகளை ஊரக வளர்ச்சியுடன் இணைத்தல்: நபார்டு வங்கியால் அமைக்கப்பட்ட ஊரக வணிக நடுவத்தின் மூலம் சந்தை மற்றும் தொழில் நுட்ப வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு முன்னேற்றம் காண்பது தான் இந்த கொள்கையின் அடிப்படை ஆகும்.

21. உணவு தன்னிறைவு: உபரி விளைச்சலை இழப்பாக மாறாமல் தடுத்தல், விலை மாற்றங்களிலிருந்து விவசாயிகளை பாதுகாத்தல், உணவு தானியத்தின் விலைகள் நியாயமாக நிர்ணயிக்கப்படுவதை உறுதி செய்தல் ஆகியவையே உணவு தன்னிறைவை ஏற்படுத்துவதற்கான உத்திகளாக இருக்கும்.

22. ஊரக பொருளாதார மறுமலர்ச்சிக்கான மும்முனைத் திட்டம்: சிறப்பு வேளாண்-பொருளாதார மண்டலங்களை(Special Agro- Economic Zones) அமைத்தல், கைவினைஞர்களின் தொழிற்பட்டறைத் தொகுப்புகளை அமைத்தல், ஊரகத் தகவல் தொடர்பு முன்முயற்சிகள் ஆகியவையே வளர்ச்சிக்கான மும்முனை திட்டங்கள்.
வேளாண்துறைக்கு திட்ட ஒதுக்கீடு

23. வேளாண்துறைக்கான திட்ட ஒதுக்கீடு ரூ.17.786 கோடியாகவும், பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.22,000 கோடியாகவும் இருக்கும். வேளாண்மைக்கான இடுபொருட்கள் அனைத்தையும் இலவசமாக வழங்க வசதியாக நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

24. மாவட்டம் தோறும் வேளாண்மை சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் விளையும் வேளாண் பொருட்களைச் சார்ந்து இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும். உற்பத்தியில் தொடங்கி, மதிப்புக்கூட்டுதல், ஏற்றுமதி வரை அனைத்துப் பணிகளும் இங்கு நடைபெறும். இதன் மூலம் அப்பகுதியில் புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.

25. தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களுக்கு ஒன்று வீதம் மொத்தம் 4 வேளாண் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படும். ஒவ்வொரு பல்கலைக்கழகமும் அதன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வேளாண் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும். பல்கலைக்கழக பேராசிரியர்கள் மூலம் மாவட்டத் தலைநகரங்களில் உழவர் கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்தப்படும்.

26. நான்கு மாவட்டங்களுக்கு ஒரு வேளாண்மைக் கல்லூரி அமைக்கப்படும்.

27. தஞ்சையில் நெல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும்

28. சர்க்கரைத் தொழில்நுட்பம் (Bachelor of Sugar Technology) என்ற புதிய பட்டப்படிப்பு தொடங்கப்படும்.

29. உளுந்து, துவரை, பாசிப்பயறு உள்ளிட்ட பருப்பு வகைகளை அதிக எண்ணிக்கையில் பயிரிட நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் தமிழகத்தில் பருப்பு விலைகள் கட்டுக்குள் கொண்டுவரப்படும்.

30. ஆற்றுப் படுகைகளில் கீரை வகைகளை அதிக அளவில் பயிரிட்டு கூலி ஆட்களின் உதவியோடு ஆய்ந்து, கழுவி சுத்தப்படுத்தி பைகளில் அடைத்து வீடுதோறும் பால் பைகள் வழங்குவது போல் விற்பனை செய்யப்படும்.

31. மதிய உணவில் பிள்ளைகளுக்கு மாம்பழச்சாறு வழங்கும் திட்டத்தை அரசு கைவிட்டுவிட்டது. அதற்கு மாற்றாக, மதிய உணவுடன் வாழைப்பழமும் நெல்லிக்காயும் கொடுப்பதோடு, கீரையையும், பழங்களையும் கட்டாயமாக உணவோடு கொடுக்க ஏற்பாடு செய்யப்படும்.

சீமைக்கருவேல மரங்களை ஒழிக்க சிறப்புச் சட்டம்
32. தமிழ்நாட்டில் வேளாண்மைக்கும் சுற்றுச்சூலுக்கும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கும் சீமைக் கருவேல மரங்களை ஒழிப்பதற்காக சிறப்புச் சட்டத்தை நிறைவேற்றும்படி, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை 27.02.2017அன்று ஆணையிட்டிருக்கிறது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து, நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே இச்சட்டம் நிறைவேற்றப்படும்.

33. சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதைவிட, அடியோடு அழிப்பதுதான் நிரந்தர தீர்வு ஆகும். பிரேசில், ஆஸ்திரேலியா, சிரியா ஆகிய நாடுகளில் கருவேல மரங்கள் ஒழிக்கப்பட்டு வருவதால், அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தமிழ்நாட்டில் சீமைக் கருவேல மரங்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

34. யூகலிப்டஸ் தைல மரங்களும், சீமைக் கருவேல மரங்களுக்கு இணையாக நிலத்தடி நீரை உறிஞ்சும் தன்மை கொண்டவை என்பதால், அவற்றை வளர்க்கத் தடை விதிக்கப்படும்.

பனை மரம் பாதுகாப்புக்கு புதிய சட்டம்
35. அழிந்து வரும் கற்பக விருட்சமாம் பனை மரங்களை வெட்டத் தடை விதிக்கப்படும். செம்மரங்கள், சந்தன மரங்களை வீடுகளில் வளர்த்தாலும், அவற்றை வெட்டுவதற்கு வனத்துறையிடம் அனுமதி வாங்க வேண்டும் என்பதைப் போல பனை மரத்தை வெட்டவும் வனத்துறை அதிகாரிகளிடம் அனுமதி வாங்குவதை கட்டாயமாக்கி புதிய சட்டம் இயற்றப்படும்.

36. தமிழ்நாட்டில் பனைமரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
நீரா பானம்

37. தென்னை மரத்திலிருந்து தயாரிக்கப்படும் “நீரா” மருத்துவ குணம் கொண்டது என்று பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் ஆய்வின் மூலம் உறுதி செய்துள்ளது. எனவே, மருத்துவ குணம் கொண்ட நீராவை இறக்கி விற்பனை செய்ய விவசாயிகளுக்கு அனுமதி அளிக்கப்படும்.

வேளாண்மைக்கு இலவச இடுபொருட்கள்

38. வேளாண்மைக்கு இலவச இடுபொருட்கள் வழங்குவதற்கான விரிவான திட்டத்தை அரசு தயாரித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:
* தமிழ்நாட்டில் நிலங்களின் தன்மை ஆய்வு செய்யப்பட்டு, அவற்றில் என்னென்ன பயிரிடலாம், அவற்றுக்கு எவ்வளவு உரம் தேவை என்ற விவரங்கள் அடங்கிய அட்டை வழங்கப்படும்.
* அந்த அட்டையில் குறிப்பிட்டுள்ளவாறு, விவசாயிகள் பயிரிட விரும்பும் பயிர்களுக்கான விதைகள், வேளாண் விரிவாக்க மையம் மூலம் இலவசமாக வழங்கப்படும்.
* விவசாயிகள் பயிரிடும் பயிருக்கு ஏற்ப தேவைப்படும் அளவுக்கு உரங்களும், பூச்சிக்கொல்லி மருந்துகளும், பரிந்துரைக்கப்பட்ட அட்டவணைப்படி கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்படும்.
* உழவு செய்வதற்கான டிராக்டர்கள், அறுவடை செய்வதற்கான இயந்திரங்கள் ஆகியவை உழவர்கள் விரும்பும் நாட்களில் ஊராட்சி மன்றங்கள் மூலம் வாடகையின்றி வழங்கப்படும்.
ஒரு டன் கரும்புக்கு ரூ.4991, நெல்லுக்கு ரூ.3021

39. வேளாண் விளைபொருட்களுக்கு அவற்றின் உற்பத்திச் செலவுடன் 50% லாபம் சேர்த்து கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படும். உற்பத்திச் செலவு மற்றும் கொள்முதல் விலை கணக்கிடப்படும் முறை குறித்த விரிவான விளக்கம் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையின் 24,25-ஆம் பக்கங்களில் தரப்பட்டுள்ளது.

40. 2017-18ஆம் ஆண்டில் ஒரு டன் கரும்புக்கு ரூ.4991 கொள்முதல் விலையாக வழங்கப்படும்.

41. ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,021 கொள்முதல் விலையாக வழங்கப்படும்.

42. கர்நாடகத்தில் உள்ளது போல தமிழகத்திலும் வேளாண் சந்தைக் கொள்கை உருவாக்கி வெளியிடப்படும்.

திருச்சியில் சஃபல் சந்தை
43. தில்லி, பெங்களூருவில் செயல்படுவது போன்று திருச்சியில், சஃபல் சந்தை (Safal Market) தொடங்கப்படும். இதன் மூலம் விளைப்பொருட்களை மின்னணு ஏலமுறையில் விற்பனை செய்யப்படும்.

44. வட்டம் மற்றும் மாவட்ட அளவில் உற்பத்தியாளர்களின் கூட்டமைப்பு ஏற்படுத்தப்படும். அந்த கூட்டமைப்பின் தலைமைக் குழு அன்றாடம் அந்த வட்டத்தில் அறுவடையாகும் விளை பொருட்களுக்கு விலை நிர்ணயிக்கும். அந்த கூட்டமைப்பு மூலமாகவே விற்பனைகள் செயல்படுத்தப்படும்.

45. ஒவ்வொரு மாநகரங்களிலும் மாவட்டத் தலைநகரங்களிலும் தோட்டக்கலைப் பொருட்களுக்காக பெரிய சந்தைகள் கோயம்பேடு சந்தைபோல் அமைக்கப்படும். நகரங்களில் இயற்கை விவசாய விளைபொருட்களை விற்பதற்கு தனி அங்காடிகள் அமைத்துக் கொடுக்கப்படும்.

46. வேளாண்மை சார்பு தொழில்களான காளான் வளர்ப்பு, தேனி வளர்ப்பு, சிறு தானிய ரொட்டி மற்றும் பிஸ்கட்கள், ஜாம் மற்றும் ஜெல்லி வகைகள், பால்கோவா போன்ற பொருட்களை தயாரிக்க சுய உதவிக் குழுக்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படும்.

47. தோட்டக்கலை பொருட்களின் உற்பத்தியை பெருக்க தோட்டக்கலை பல்கலைக்கழகம் தொடங்கப்படும்.

48. தென்னை தொழில்நுட்ப பூங்கா பொள்ளாச்சியிலும், பாக்கு தொழில்நுட்ப பூங்கா சேலத்திலும் ஆரம்பிக்கப்படும்.

49. மாநில வாசனைப் பொருட்கள் வாரியம் திருச்சியில் ஆரம்பிக்கப்படும்.

50. வெளியூர்களுக்கு காய்கறிகள், பழங்கள், பூக்கள் முதலிய தோட்டக்கலைப் பொருட்களை அனுப்புவதற்கு குளிர்சாதன வசதி கொண்ட பெரிய சரக்குந்துகள் பயன்படுத்தப்படும்.

51. அரிசி ஆலைகளில் அரிசியை அதிகமாக தீட்டுவதால் அரிசியிலுள்ள ஊட்டச்சத்துகள் நீக்கப்படுகின்றன. நவீன ஆலைகளில் அரிசி தீட்டப்படுவதை முறைப்படுத்தப்படும்.

52. விற்கப்படும் உணவுப் பொருட்களில் அடங்கியிருக்கும் ஊட்டச்சத்துக்களின் அளவு விபரங்களை பொட்டல அட்டையில் வெளியிடுவதைக் கட்டாயமாக்கப்படும்.

வேளாண்மை – 4 அமைச்சகங்கள்

53. தமிழ்நாட்டில் வேளாண் துறை சார்ந்த பணிகளைக் கவனிக்க வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் சந்தைத்துறை, நீர்வள மேலாண்மை என மொத்தம் 4 அமைச்சகங்கள் செயல்படும். ஒவ்வொரு அமைச்சகத்திற்கும் தனித்தனி அமைச்சர்கள் என மொத்தம் 4 அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள்.
காவிரி – அமைச்சர்கள் குழு

54. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஏப்ரல் மாதம் தீர்ப்பளிக்க உள்ளது. அதன் பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு காலதாமதம் செய்தால் அதுகுறித்து மத்திய அரசுடன் பேச்சு நடத்தி வாரியம் அமைக்கப்படுவதை உறுதி செய்வதற்கான சட்ட அமைச்சர் தலைமையில் அமைச்சர்கள் குழு அமைக்கப்படுகிறது.

55. காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்திருக்கிறது. ரூ.5,912 கோடி செலவில் இத்திட்டத்தைச் செயல்படுத்த கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. இத்திட்டத்தை தடுத்து நிறுத்தும் பணிகளையும் சட்டஅமைச்சர் தலைமையிலான அமைச்சர்கள் குழு மேற்கொள்ளும்.
56. முல்லைப்பெரியாற்றின் நீர்மட்டத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

57. பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணைகளைக் கட்டவும், ஏற்கெனவே கட்டப்பட்ட தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிக்கவும் ஆந்திரா மேற்கொள்ளும் முயற்சிகள் முறியடிக்கப்படும்.

58. விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் குறிப்பிட்ட நேரத்திற்கு தடையின்றிக் கிடைக்க வழி செய்யப்படும்.

59. ஊராட்சிக்கு ஒரு டிராக்டர் வழங்கப்படும். இதை அப்பகுதி விவசாயிகள் தங்களின் தேவைகளுக்காக வாடகையின்றி பயன்படுத்திக் கொள்ளலாம்.

60. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஏரிகள், குட்டைகள் மற்றும் அணைகளில் ஏற்பட்டுள்ள வண்டல் மண் தூர் வாரப்படும். விலை உயர்ந்த வண்டல் மண்ணை மிகவும் குறைந்த விலையில் உழவர்களுக்கு விற்பதன் மூலம் கிடைக்கும் வருவாய் தூர்வாரும் பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளப்படும்.

அத்திக்கடவு -அவினாசி திட்டம்

61. திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்குப் பயனளிக்கும் அத்திக்கடவு & அவினாசித் திட்டம் ரூ.3523 கோடி செலவில் மாநில அரசின் நிதியில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்திற்கு நடப்பாண்டில் ரூ.1500 கோடி ஒதுக்கப்படும்.

நீர்ப்பாசனப் பெருந்திட்டம்

62. நீர்ப்பாசன வசதி பெறும் நிலப்பரப்பைப் பெருக்குவதற்காக அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.50,000 கோடியில் நீர்ப்பாசனப் பெருந்திட்டம் நிறைவேற்றப்படும். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

63 கோவை, திருப்பூர் மாவட்டங்கள் பயன்பாட்டுக்கான பாண்டியாறு புன்னம்புழா திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு அறியப்படும்.

64. காவிரி, -சரபங்கா நதி, -திருமணிமுத்தாறு இணைப்புக் கால்வாய் கிட்டத்தட்ட 170 கி.மீ. நீளம் கொண்டது ஆகும். இந்தத் திட்டத்தால் 30,154 ஏக்கர் நிலம் நேரடியாக பாசன வசதி பெறும். மேலும். நிலத்தடி நீர் ஆதாரம் மேம்பாடு அடைவதன் மூலம் 18,228 ஏக்கர் பாசன வசதிபெறும். இத்திட்டத்திற்கு மொத்தம் ரூ.1314 கோடி செலவாகும். மத்திய அரசின் நிதியுதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

65. மேட்டூர் அணை வலதுகரை கால்வாய் நீட்டிப்புத் திட்டம்: ஈரோடு மாவட்டம் அந்தியூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி செய்து தரும் வகையில் மேட்டூர் அணை வலதுகரைக் கால்வாய்த் திட்டம் செயல்படுத்தப்படும்.

66. விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் நந்தன் கால்வாய்த் திட்டம் செயல்படுத்தப்படும். நந்தன் கால்வாயை தென்பெண்ணை ஆற்றுடன் இணைக்கும் திட்டமும் செயல்படுத்தப்படும்.

67. தருமபுரி மாவட்டத்தில் என்னேகொல்புதூர் பாசனத்திட்டம் செயல்படுத்தப்படும்.

68. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் படேதலா கால்வாய்த் திட்டம், பாளேகுளி பாசனத்திட்டம் செயல்படுத்தப்படும்.

69. சேலம் மாவட்டத்தில் தோனி மடுவு பாசனத் திட்டம் செயல்படுத்தப்படும்.

70. பாலாறு பாசனத் திட்டம்: பாலாற்றில் வீணாகும் நீரை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் நல்லாத்தூர், ஆலப்பாக்கம், பழவேலி, பாலூர், திருமுக்கூடல் ஆகிய பகுதிகளில் தடுப்பணைகள் கட்டப்படும். அடுத்தகட்டமாக காஞ்சிபுரம் வட்டம் பெரும்பாக்கம்; உத்திரமேரூர் வட்டம் திருமுக்கூடல்; செங்கல்பட்டு வட்டம் ஆலப்பாக்கம்; மதுராந்தகம் வட்டம் எல்.என்.புரம் என, நான்கு இடங்களில் தடுப்பணை கட்டப்படும்.

71. தென்பெண்ணை – பாலாறு இணைப்புத் திட்டம்: கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாகப் பாயும் தென்பெண்ணை ஆற்றையும், பாலாற்றையும் இணைக்கும் திட்டத்தைச் செயல்படுத்தலாம்

72. தாமிரபரணி – நம்பியாறு இணைப்புத் திட்டம் : தாமிரபரணி ஆற்றில் இருந்து ஆண்டுதோறும் சராசரியாக 13 டி.எம்.சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. தாமிரபரணி ஆறு, கருமேனி ஆறு, நம்பியாறு, பச்சையாறு, கோரையாறு, எலுமிச்சையாறு ஆகிய ஆறு நதிகளை இணைப்பதன் மூலம், வீணாகும் தண்ணீரை தேக்கி ராதாபுரம், நாங்கு நேரி, சாத்தான்குளம் பகுதிகளுக்கு கால்வாய் மூலம் கொண்டு சென்று பாசனத்திற்காக பயன்படுத்தலாம்.

73. காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம்: கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களின் வறுமையைப் போக்குவதற்காக 69 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட திட்டம் தான் காவிரி& குண்டாறு இணைப்புத் திட்டம் ஆகும். காவிரி, அக்கினியாறு, கோரையாறு, பாம்பாறு, வைகை, குண்டாறு ஆகிய நதிகளை இணைப்பது தான் இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும்.

74. தென்பெண்ணை- துரிஞ்சலாறு இணைப்பு: நந்தன் கால்வாய் திட்டத்தின் நீர் ஆதாரமாக திகழ்வது துரிஞ்சலாறு ஆகும். துரிஞ்சலாறு ஒரு காட்டாறு என்பதால் மழைக்காலத்தில் மட்டும் நந்தன் கால்வாயில் தண்ணீர் வரும். இது நந்தன் கால்வாயை நம்பியுள்ள பல லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு இந்த தண்ணீர் போதுமானதல்ல. நந்தன் கால்வாய் திட்டம் முழுமையான பயனளிக்க வேண்டுமானால், தென்பெண்ணையாற்றுடன் நந்தன் கால்வாயை இணைப்பது தான் சிறந்த வழியாகும்.

பிற பாசனத் திட்டங்கள்

75. தமிழகத்தில் தூர்ந்து போன, ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிகள் கண்டறியப்பட்டு பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும்.

76. வீராணம் ஏரி, பொன்னேரி, ஆர்.எஸ்.மங்கலம் ஏரி உள்ளிட்ட தமிழகத்தின் பெரிய ஏரிகள் அனைத்தும் தூர்வாரப்பட்டு, அவற்றின் முழுக் கொள்ளளவு எட்டப்படும்.

77. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேவையான நீர்பாசனத் திட்டங்கள் குறித்து அந்தந்த மாவட்ட உழவர் சங்கங்களுடன் கலந்தாய்வு நடத்தி முடிவெடுக்கப்படும்.

78. தமிழகத்திற்குள் பாயும் ஆறுகளை இணைக்கும் திட்டம் முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.

79. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஏரிகள், குளங்கள் மீட்கப்பட்டு மீண்டும் மழை நீர் தேக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

80. ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தின் அனைத்து நதிகளில் இருந்தும் சுமார் 205 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்தில் வறண்டு கிடக்கும் நீர்நிலைகளுக்கு குழாய்கள் மூலம் கொண்டு சென்று நிரப்பி நிலத்தடி நீர்மட்டம் மேம்படுத்தப்படும்.

தடுப்பணைத் திட்டங்கள்

81. தமிழ்நாட்டில் முறையான நீர்மேலாண்மை இல்லாததன் காரணமாக, பருவமழை மூலம் கிடைக்கும் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இதைத் தடுக்கும் வகையில் தமிழகத்தின் முக்கிய ஆறுகளில் தடுப்பணைத் திட்டங்களைச் செயல்படுத்த தமிழக அரசு தீர்மானித்துள்ளது. அதன்படி, குறைந்தபட்சம் 5 கி.மீ.க்கு ஒரு தடுப்பணை வீதம் முக்கிய ஆறுகளில் கட்டப்படும்.
82. கொள்ளிடத்தில் தடுப்பணை:காவிரியின் கிளை நதியான கொள்ளிடத்தில் 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்டப்பட வேண்டும் என்பது அரசின் நிலைப்பாடு ஆகும். மொத்தம் 110 கி.மீ. நீளம் கொண்ட கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 10 தடுப்பணைகளை அமைக்கலாம்.

83. காவிரியில் தடுப்பணை: காவிரி மற்றும் அதன் கிளை நதிகளான அரசலாறு, திருமலைராஜன் ஆறு, குடமுருட்டி ஆறு, வெண்ணாறு, வெட்டாறு, கல்லணைக் கால்வாய் ஆகியவற்றில் திறந்துவிடப்படும் தண்ணீரில் பெரும்பகுதி வீணாகக் கடலில் கலப்பதை தடுக்கும் வகையில் தடுப்பணைகள் கட்டப்படும்.

84. 56 டி.எம்.சி தண்ணீரை சேக்கமி தடுப்பணைகள்:கடலூர் மாவட்டத்தில் கொள்ளிடம், வெள்ளாறு, கெடிலம் ஆறு, தென்பெண்ணையாறு, மணிமுத்தாறு ஆகிய 5 ஆறுகள் கடலில் கலக்கின்றன. இந்த ஆறுகளில் தடுப்பணைகளை கட்டுவதன் மூலம் 56 டி.எம்.சி. தண்ணீரை சேமிக்க வேண்டும்

85. இஸ்ரேல் நாட்டின் கிட்புட்ஸ் கிராமத்தில் உள்ளதுபோல் (Kitbutz village in Israel) கூட்டுறவு பண்ணையம் ஒவ்வொரு மாவட்டத்திலும் 2 கிராமங்களில் செயல்படுத்தப்படும். இதன் மூலம் அனைத்து நிலங்களும் கிராம சபைத் தலைவர் மற்றும் செயலாளர்களிடம் ஒப்படைக்கப்படும். அடிப்படை உழவு முதல் பயிர்கள் அறுவடை வரை அனைத்தும் கிராம மக்களால் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொண்டு அறுவடை செய்த பொருட்களை உழவர்களின் நில அளவுக்கு ஏற்றவாறு செலவுகள் தவிர்த்து மீதமுள்ள தொகை பணமாக வழங்கப்படும்.
86. கூட்டுறவுத் துறை மூலம் உழவர்களுக்கு இன்சூரன்ஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டு, உழவர்களின் உடல் நலம் மற்றும் அறுவை சிகிச்சை செய்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

87. இயற்கை வேளாண்மையின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களை வகுத்து செயல்படுத்த, இயற்கை வேளாண்மை என்ற புதிய துறை தொடங்கப்படும். இதற்கு தனி செயலர் நியமிக்கப்படுவார்.

88. இலவச மின் இணைப்பு வழங்க வசதியில்லாதப் பகுதிகளில், வேளாண் பொறியியல் துறை மூலம் உழவர்களுக்கு இலவசமாக சூரியஒளி மின்சார மோட்டார்கள் அமைத்துத் தரப்படும்.

89. ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்பதால், சர்க்கரை ஆலைகளில் கிடைக்கும் மொலாசஸ் முழுவதும் எத்தனால் தயாரிப்பதற்கே பயன்படுத்தப்படும்.

90. எத்தனாலின் தேவை அதிகரிக்கும் பட்சத்தில் மரவள்ளிக்கிழங்கு போன்ற தாவரங்களில் இருந்து எத்தனால் தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்.

91. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் விவசாயத்திற்கும் நீட்டிக்கப்படும்.

92. வேளாண் பணிகள் இல்லாத கோடைக்காலத்தில் ஏரி, குளங்களை தூர்வாருதல், கால்வாய்களை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். இதற்கு வசதியாக, இத்திட்டத்தின்படியான, வேலை நாட்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்த்தப்படும்.

93. கூட்டுறவு வங்கிகளில் உறுப்பினர்களாக உள்ள அனைத்து உழவர்களுக்கும், கூட்டுறவு வங்கிகள் மூலம் 60 வயதுக்குப் பிறகு மாதம் ரூ.5,000/- பென்சன் வழங்கப்படும்.

94. நாட்டுக் கோழிகள், ஆடுகள், வான் கோழிகள் போன்றவை கிராமப்புற சுய உதவிக் குழுக்கள் மூலம் வளர்க்கப்பட்டு பட்டதாரி இளைஞர் குழுக்கள் மற்றும் கூட்டுறவுத் துறை பங்களிப்புடன் முக்கிய நகரங்கள், சாலையோர உணவகங்கள் அமைக்கப்பட்டு கிராமங்களில் ஒரே இடத்தில் அனைத்தும் சமைக்கப்பட்டு கூட்டுறவு முறை உணவகங்களுக்கு ஒரே ருசியில் வழங்கப்படும்.

95. சாலையோரங்களில் கூட்டுறவு உணவகங்கள் மூலம் தரமான உணவு, மலிவான விலையில் வழங்கப்படுவதால், பேருந்துகள் மற்றும் பிற வாகனங்களில் பயணம் செய்வோர் தரமற்ற, சுகாதாரமற்ற, சுவையற்ற உணவுகளை அதிக விலைகொடுத்து உண்ணும் அவலநிலை மாறும்.

96. புரோட்டீன் சத்து மிகுந்த, கொழுப்புச் சத்து குறைந்த இறைச்சியான முயல் கறியை பிரபலப்படுத்தி, அதிக கொழுப்புச் சத்து மிகுந்த ஆடு, மாடு இறைச்சியின் பயன்பாடு குறைக்கப்படும்

97. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு நவீன மாட்டுப் பண்ணை ஆரம்பிக்கப்படும். உழவர்கள் தாங்கள் விரும்பும் மாடுகள் எண்ணிக்கையில் வாங்கி மாட்டுப் பண்ணைகளில் ஒப்படைத்து விட்டால், அவர்களே 1000 மாடுகளை நவீன தொழில்நுட்பத்துடன் வளர்த்து அதில் கிடைக்கும் பாலினை உள்நாட்டுத் தேவைக்கு போக மீதமுள்ளதை வெளிநாடுகளுக்கு அனுப்பி அதன் மூலம் அதிக வருவாய் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.

98. உழவர்களின் நிலங்களில் அவர்களின் நில அளவுக்கு ஏற்றாற்போல் தனியார் பங்களிப்பு மற்றும் அரசு மானியத்துடன் குட்டைகள் தோண்டப்பட்டு, மீன் வளர்ப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்..
99. தமிழ்நாட்டில் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்குடன், அடுத்த 5 ஆண்டுகளில் 300 கோடி மரக்கன்றுகள் நடப்படும். இத்திட்டத்திற்கு பசுமைத் தமிழகம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

100. வேளாண்துறை வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்துவதற்கு வசதியாக மொத்தம் 56 தலைப்புகளில் 226 யோசனைகளை தமிழக அரசுக்கு தெரிவித்திருக்கிறோம். இவற்றை பா.ம.க.வின் திட்டங்களாக கருதாமல், வேளாண் பெருமக்களின் கோரிக்கையாக கருதி நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் பா.ம.க.வின் விருப்பமும் வேண்டுகோளும் ஆகும்.

3 thoughts on “பாமக-வின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை – 2017”

  1. அருமையான விவசாயிக்கு தேவையான நிதிநிலை அறிக்கை

  2. விவசாயி வாழ்வு வளர ஆதரிப்பீர் பாட்டாளி மக்கள் கட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj