Skip to content

காய்கறிகளை எப்படி வாங்கலாம்….

இப்போ நான் சொல்லப் போற விஷயத்தை, விவசாயிகள், பொதுமக்கள்னு எல்லாருமே மனசுல ஏத்தி வெச்சுக்கோங்க. அதாவது, தினசரி நாம உபயோகப்படுத்துற காய்கறிகள பத்திதான் இப்ப சொல்லப் போறேன்.

           விவசாயிகள், சரியான பக்குவத்துல காய்கறிகள அறுவடை செஞ்சாதான், சந்தையில நல்ல விலை கிடைக்கும். மக்களுக்கும், கொடுக்குற காசுக்கு தரமான, முத்திப் போகாத காய்கறிகள் கிடைக்கும். அப்பதானே அவங்களுக்கும் பிரயோஜனம்.

           வாழைத்தண்டு வாங்கும்போது, மேல்பகுதியில அதிகமா நார் இருக்கக் கூடாது. தண்டுப் பகுதி சிறுத்து இருக்கணும். பெரிய வெங்காயத்தை (பல்லாரி) நசுக்கினாலே சாறு வரணும். சாறு கொஞ்சமா வந்தா… பழைய வெங்காயம்னு அர்த்தம். அதுல, சுவையும், சத்தும் சொல்லிக்கற மாதிரி இருக்காது. அதேசமயம், சின்ன வெங்காயத்துல பழைய வெங்காயம் வாங்குறதுதான் நல்லது. இரண்டு பல் மட்டும் இருக்குற மாதிரி முத்து முத்தா இருக்கற வெங்காயம்தான் தரமானது. பூண்டு வாங்கும்போதும், இப்படி பல் பல்லா வெளியில தெரியற மாதிரியா வாங்கணும். இதுதான் தரமான பூண்டு! முருங்கைக்காயை, லேசா முறுக்கிப் பாருங்க. ரப்பர் மாதிரி வளைஞ்சா… நல்ல காய். முறைப்பா வளையாம இருந்தா… முத்திப் போச்சுதுனு அர்த்தம்.

           சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாகுபடியே அரிதுதான். ஆனாலும், அதை விரும்பி சாப்பிடற மக்கள் இருக்கத்தான் செய்றாங்க. கொஞ்சம் கிழங்க உடைச்சு, வாயில போட்டு பார்த்தா, இனிக்கணும். இனிப்பு குறைவாகவோ… கிழங்கு கருப்பு நிறத்துலயோ… இருந்தா, அது தரம் இல்லாத கிழங்கு. கோவைக்காய்க்கு நகர்ப்புறங்கள்ல ரசிகர் மன்றம் வைக்கிற அளவுக்கு வரவேற்பு இருக்கு. முழுக்க பச்சையா இருந்தா மட்டும்தான் வாங்கணும். லேசா சிவப்பு நிறம் இருந்தா, வாங்கக் கூடாது. அதுல சுவை இருக்காது. தேங்காயை காது பக்கத்துல வெச்சு தட்டிப் பார்த்து முத்தலா… இளசானு கண்டுபிடிப்பாங்க. அதேபோல மாங்காயையும் தட்டிப் பாக்கணும். சத்தம் வந்தா… கொட்டை சிறிசாவும், சதை அதிகமாகவும் இருக்கும்னு புரிஞ்சுக்கலாம்.

           அடிப்பகுதி மட்டும் குண்டா இல்லாம, காய் முழுதும் ஒரே சைஸ்ல இருந்தாதான் தரமான பீர்க்கங்காய். முளை விடாம, பச்சை நரம்பு ஓடாம இருக்குற உருளைக் கிழங்குதான் நல்ல கிழங்கு. அதுலயும், கீறினா… தோல் உறியற கிழங்கா பார்த்து வாங்கணும். அப்படி உறியலனா… வாங்கக் கூடாது.

           கருணைக்கிழங்குல (சேனை) பெருசா இருக்கற கிழங்கா பார்த்து வாங்கணும். அதுதான் நல்லா விளைஞ்சி இருக்கும். வெட்டினா… உள்பக்கம் இளஞ்சிவப்பு நிறத்தில இருக்குதாங்கறதையும் உறுதிப்படுத்திக்கோங்க. முளைவிட்டது போல, ஒரு முனை நீண்டுட்டிருக்கற கிழங்குல சுவை இருக்காது.
சுரைக்காயை நகத்தால் அழுத்தும் போது, நகம் உள்ளே இறங்கினா… இளசு. இல்லாட்டி, முத்தல். அவரைக்காய் விதை, பெரிசா இருந்தா முத்தல். விதை சிறுசா இருந்தாதான் நார் இல்லாம, சுவையா இருக்கும். குண்டு, குண்டா இருக்கற பாகற்காயை வாங்கக் கூடாது. அதுல அவ்வளவா சதைப் பிடிப்பு இருக்காது. தட்டையானக் காய்தான் சதைப் பிடிப்பாவும் இருக்கும். ருசியாவும் இருக்கும்.

           மொச்சைக் கொட்டை பெரிசு, பெரிசா இருந்தாதான் தரமானது. வாய்ப் பகுதி விரிசல் பெரிசா இல்லாத செளசெள காயைத்தான் வாங்கணும். விரிசல் இருந்தா… முத்திப்போச்சுதன்னு புரிஞ்சிக்கோங்க.

           மிளகாய்ல விதம்விதமா இருக்கு. அதுல, அளவுக்குத் தக்கப்படி காரமும் இருக்கும். நீளமான மிளகாய்ல காரம் குறைவா இருக்கும். குண்டு மிளகாய்ல தான் காரம் தூக்கலா, வாசனையும் பிரமாதமா இருக்கும்.

                                                                                                    நன்றி

                                                                                     பசுமை விகடன்

5 thoughts on “காய்கறிகளை எப்படி வாங்கலாம்….”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj