Site icon Vivasayam | விவசாயம்

”தரமான மாஞ்செடிகள் எங்கு கிடைக்கும்?”

தமிழ்நாட்டில் தரமான மாஞ்செடிகள் உற்பத்தி செய்யும் அரசுப் பண்ணை எங்குள்ளது?”

எம்.சுகந்தி, திருவெண்ணெய்நல்லூர்.கன்னியாகுமரியில் உள்ள அரசுத் தோட்டக்கலைப் பண்ணையில் அலுவலர் பதில் சொல்கிறார்.

தமிழக வேளாண்மைத் துறையின்கீழ் தமிழ்நாடு முழுவதும் 53 தோட்டக்கலை பழப்பண்ணைகள் உள்ளன. இந்தப் பண்ணைகளில் அந்தந்தப் பகுதிகளுக்கேற்ற பழ வகைக் கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. இந்த 53 பண்ணைகளுக்குத் தேவையான மா ரகங்களைக் கன்னியாகுமரி பண்ணையில்தான் உற்பத்திசெய்து விவசாயிகளுக்குக் கொடுத்து வருகிறோம்.

தமிழ்நாட்டில் மா ரகங்களை உற்பத்தி செய்ய பிரத்யேகமாக உருவாக்கப் பட்டதுதான் கன்னியாகுமரி பண்ணை சுமார் 32 ஏக்கரில் இந்தப் பண்ணை அமைந்துள்ளது. தமிழக அளவில் பயன்பாட்டிலுள்ள 42 ரகங்களைச் சேர்ந்த மாமரங்கள் இங்குள்ளன. வழக்கமாக ஜீன், ஜீலை மாதங்களை மா காய்ப்பதற்கான முக்கியப் பருவம் என்போம். ஆனால், குமரி மாவட்டத்தில் மட்டும் முக்கியப் பருவம் என்றில்லாமல், அக்டோபர் முதல் ஜனவரி மாதம் வரையிலும் காய்க்கும். இதைத்தான் இடைப்பருவம் என்கிறோம்.

இப்பருவத்தில் காய்க்கும் மாங்காய்களுக்கு அதிகவிலை கிடைக்கிறது. இடைப்பருவத்தில் அதிக மகசூலைத் தருகிற மா ரகங்கள் இந்தப் பண்ணையில் மட்டும்தான் அதிகளவில் உள்ளன. இடைப்பருவ மா குறித்து ஆராய்ச்சிகளும் இங்கு நடைபெற்று வருகின்றன.

நீலம், பெங்களூரா, ஹீமாயுதீன், அல்போன்சா, பங்கனப்பள்ளி, காலப்பாடு போன்ற ரகங்கள் சாப்பிடுவதற்கு மிகவும் ருசியாக இருக்கும். மோகந்தாஸ், நாடன் போன்றவை புளிப்புத் தன்மையுடன் இருப்பதால் ஊறுகாய்க்கு ஏற்றவை. இப்படிப்பட்ட சிறப்புத் தன்மையுடன் கூடிய பல ரகங்கள் இங்குள்ளன. மாங்கன்றுகளை வாங்கும்போதே அது பற்றிய தகவல்களையும் இங்கு தெரிந்து கொள்ளலாம். இது தவிர, அருகில் வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகினாலும், உங்கள் பகுதியிலுள்ள தோட்டக்கலைப் பண்ணை குறித்த தகவலைச் சொல்வார்கள். அந்தப் பண்ணைக்குச் சென்று அங்கு விற்பனை செய்யப்படும் மாங்கன்றுகளை வாங்கிக் கொள்ளலாம். மாஞ்செடியின் விலை, ரகங்களுக்குத் தக்கபடி மாறுபடும்.”

Exit mobile version