Site icon Vivasayam | விவசாயம்

உளுந்து சாகுபடி

ஏக்கருக்கு 5 கிலோ விதை

“உளுந்தை அனைத்துப் பட்டத்திலும் விதைக்கலாம். தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தை உழுது இரண்டு நாட்கள் காய விட வேண்டும். 200 கிலோ சலித்த சாணத்தூளுடன், 20 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரைச் சேர்த்து பிசைந்து ஒரு நாள் முழுவதும் நிழலில் காய வைத்து அதை நிலத்தில் கொட்டிக் கலைத்து ஓர் உழவு செய்ய வேண்டும். பிறகு, வசதிக்கேற்றவாறு பாத்திகள், வாய்க்கால்கள் அமைத்து, 5 கிலோ உளுந்தை உழவு ஓட்டிக்கொண்டே விதைக்க வேண்டும். மட்கிய சாணத்தைப் பொடித்தெடுத்த தூளுடன் மாட்டுச் சிறுநீர் கலந்து அடியுரமாக இடுவதால், டிராக்டர் கணக்கில் மட்கிய குப்பை கொட்டத் தேவையில்லை.

உளுந்தை விதைத்தவுடன் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 3-ம் நாள் உயிர் தண்ணீர் கொடுத்து விட்டு நிலத்தின் ஈரப்பதத்தைப் பொறுத்து பாசனம் செய்து கொள்ளலாம். 5-ம் நாளிலிருந்து முதல் 7-ம் நாளுக்குள் முளைப்பு எடுக்கும். 20 மற்றும் 40-ம் நாட்களில் 10 லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி மீன் அமினோ அமிலம், 20 மில்லி காதிசோப் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து வயல் முழுவதும் தெளிக்க வேண்டும். 30-ம் நாள் களை எடுக்க வேண்டும்.

35-ம் நாள் முதல் 40-ம் நாளுக்குள் ஒரு அடி உயரத்துக்கு பயிர் வளர்ந்து விடும். 40-ம் நாளுக்கு மேல் பூவெடுத்து 45-ம் நாளுக்கு மேல் காய்பிடிக்கத் தொடங்கும். 65-ம் நாளிலிருந்து 70-ம் நாளுக்குள் உளுந்து, கறுப்பு நிறத்துக்கு மாறத்தொடங்கும். 75-ம் நாளில் அறுவடைக்குத் தயாராகி விடும். கறுப்பு நிறம் தென்பட்டால், ஒரு நெத்தை எடுத்து உடைத்து, வாயில் போட்டுப் பார்க்க வேண்டும். அது உடைந்தால், அறுவடைக்குத் தயார் என்று அர்த்தம். இயற்கை முறையில் சாகுபடி செய்யும் போது, நோய், பூச்சித்தாக்குதல் வருவதில்லை”.

நன்றி

பசுமை விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Exit mobile version