Vivasayam | விவசாயம்

சேற்று நெல்லுக்கு மாற்று நெல்லாக குறைந்த நீரில் குன்றாத விளைச்சல்!!!

நெற்பயிர் என்று நினைக்கும்போதே நம் எண்ணத்தில் தோன்றுவது சேற்று நீர் நிறைந்த நிலம்தான். ஆனால் நெற்பயிரை சேற்றுப் படுக்கையில்லாமல் மற்ற பயிர்களைப் போல் சொட்டு நீர் பாசனத்தில் வளர்க்கும் முறையை தென் கொரியாவை சேர்ந்த விஞ்ஞானி சங் ஜின் சோ(Sungjin choe) என்பவர் கண்டுபிடித்துள்ளார். இதற்கு அவர் வைத்துள்ள பெயர் ஸீட் பிலிம் கல்டிவேஷன்(Seed Film Cultivation – SFC).

Seed Film Cultivation (SFC):

இந்த முறையில் குறைந்த நீரில் இயற்கை சாணத்தை உரமாகக் கொண்டு மக்கும் தாள்களைப் (Bio degradable sheets) பயன்படுத்தி நிலத்தை மூடி அதிக நெல் மகசூல் எடுக்கலாம்.

SFC அமைக்கும் முறை :

1.) உழவு செய்த வயலின் மேற்பரப்பில் மக்கும் தாளை படர்த்தி, அதன் மேல் மண் கொண்டு மூடவேண்டும்.

2.) நெல் விதைகளை மக்கும் தாளில் தேவையான இடங்களில் துளையிட்டு விதைகளை தூவி இயற்கை சானத்தை உரமாக கொண்டு மூட வேண்டும்.

3.) விதைகளை விதைத்தவுடன் சொட்டு நீர் பாசன முறையில் நீர் பாசனம் செய்ய வேண்டும்.

SFC முறையில் உள்ள தொழில்நுட்பம்:

1.)  விதை இணைப்பான் (Seed-attacher) என்னும் இயந்திரம் மக்கும் தாளில் விதைகளை இணைக்க பயன்படுகிறது. இந்த இயந்திரத்தின் விதை இணைப்பு திறன் ஒரு நாளைக்கு 14 ha (எக்டேர்) ஆகும்.

2.)  மல்ச்சர் (Mulcher) என்ற இயந்திரம் விதை இணைக்கப்பட்ட மக்கும் தாளை மண்மேல் படர்த்தி அதன் மேல் மண் கொண்டு மூடும்.

3.) இந்த மக்கும் தாள்கள் 90 சதவீதம், 180 நாட்களில் மக்கி சிதைந்து விடும்

4.)  இந்த மக்கும் தாள்கள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

பயன்கள் :

✓ மக்கும் தாள்கள் களைகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது.

✓ அதிக வேலையாட்களின் தேவையை இம்முறையானது குறைக்கிறது.

✓நீர் மேலாண்மை, உர மேலாண்மை அனைத்திற்கும் முக்கியத்துவம் தருகிறது.

✓ நீர் வீணாகாமல் அதிக மகசூல் எடுக்கலாம்.

✓ 6 முதல் 7 டன்கள் வரை குறைந்த நீரில் மகசூல் எடுக்கலாம் என்கிறார் சங் ஜின் சோ (Sungjin Choe).

கட்டுரையாளர் : கா.அருணகிரி, இளம் அறிவியல் வேளாண்மை இறுதியாண்டு மாணவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம். மின்னஞ்சல் : arunagiri.k.tamizhan@gmail.com

Exit mobile version