Site icon Vivasayam | விவசாயம்

கறவை மாடுகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த தீவனப்பயிர் கோ 9 தட்டப்பயறு

அதிக பால்தரும் கறவை மாடுகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த தீவனப்பயிராக, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் கோ 9 தட்டப்பயறு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதிக பால்கறக்கவேண்டி கறவைமாடு வளர்ப்போர்கள் தீவனங்களுக்காக கூடுதல் செலவு செய்ய வேண்டியுள்ளது. அதிக ஊட்டம் நிறைந்த கோ 9 தட்டப்பயறில் குறுகிய காலத்தில் அதிகமான தீவனமும் கிடைக்கும். கோ 9 தட்டப்பயறு தீவனத்துக்காகப் பயிரிடும்போது 50 முதல் 55 நாள்களில் செடி பூத்துக்குலுங்கும் நிலையில் கறவை மாடுகளுக்கும் பிற கால்நடைகளுக்கும் தீவனமாகக் கொடுக்கலாம் என்கிறனர் மதுரை வேளாண் அறிவியல் மையத்தினர்.
ஒரு ஏக்கர் நிலத்தில் தீவனப் பயிராக அறுவடை செய்தால் 9 டன் பசுந்தீவனம் கிடைக்கும். விதையாக எடுக்கநினைத்தால் செடியை நன்குவளர்த்து 90 முதல் 95 நாள்களில் தட்டைப்பயறு 300 கிலோ மகசூல் கிடைக்கும். இதை செடியாக அறுவடைசெய்து கால்நடைகளுக்குக் கொடுத்தால் 9 டன்னும், உலர் தீவனமாக தயார் செய்தால் 1.5 டன்னும் தீவனம் கிடைக்கும்
இந்த ரகத் தட்டைப்பயறில் புரதச்சத்து 21.56 சதம் உள்ளது. குறைந்தபட்ச நார்ச்சத்தைக் கொண்டுள்ளதால் இதன் தழைகள் அதிக சுவையுள்ளதாகவும் செரிமாணத் தன்மையுள்ளதாகவும் இருக்கிறது. பொதுவாக தட்டைப்பயறில், பூஞ்சாளம், அசுவினி பூச்சி, மஞ்சள் தேமல் நோய் பாதிப்புகள் சூழ்நிலைக்கேற்ப காணப்படும். ஆனால், இந்த ரகம் மஞ்சள் தேமல் நோய் எதிர்ப்புத் திறன்கொண்டது.
பயிர் பாதுகாப்பைப் பொருத்தவரை தீவனப்பயிராக பயிரிட்டால் பயிர் பாதுகாப்புத் தேவையில்லை.

இத்தகவலை மதுரை வேளாண் மைய பூச்சியியல் தொழில்நுட்ப வல்லுநர்கள் கு.செல்வராணி, பா.உஷாராணி, கி.ஆனந்தி, செல்விரமேஷ் ஆகியோர் தெரிவித்தனர்.

Exit mobile version