Site icon Vivasayam | விவசாயம்

டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்க வாய்ப்பில்லை ?

‘மேட்டூர் அணையில் குறைந்தளவே தண்ணீர் உள்ளது; உரிய நேரத்தில் தண்ணீர் திறக்க முடியாது’ என, முதல்வர் பழனிசாமி கூறியுள்ளதன் மூலம், நடப்பாண்டு ஜூன், 12ல், அணையிலிருந்து நீர்திறக்க வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது. இதனால், டெல்டாவில், ஏழாவது ஆண்டாக குறுவை சாகுபடி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து, ஆண்டுதோறும், ஜூன், 12ல் டெல்டா குறுவை சாகுபடிக்கு நீர் திறக்கப்படும்.

அதற்கு, அணையில் நீர் இருப்பு குறைந்தபட்சம், 52 டி.எம்.சி.,க்கு மேல் இருக்க வேண்டும். 12ல் திறக்கப்படும் நீரின் மூலம், டெல்டாவில், நான்கு லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி, தொடர்ந்து, 13.10 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடிதுவங்கும்.கடந்த, 2011ல் அணை நீர்மட்டம், 115 அடியாக இருந்ததால், ஆறு நாட்களுக்கு முன், ஜூன், 6ல், டெல்டா குறுவை சாகுபடிக்கு நீர்திறக்கப்பட்டது. பின், ஆறு ஆண்டுகளாக, நீர்மட்டம் குறைவாக இருந்ததால், மேட்டூர் அணையில், ஜூன், 12ல் பாசனத்துக்கு நீர் திறக்கப்படவில்லை. மாறாக, தாமதமாக திறந்ததால், ஆறு ஆண்டுகளில், டெல்டாவில், 24 லட்சம் ஏக்கரில், குறுவை நெல் சாகுபடி பாதித்தது. நேற்று, அணை நீர்மட்டம், 34.87 அடி, நீர் இருப்பு, 9.6 டி.எம்.சி., இருந்தது. வினாடிக்கு, 2,000 கனஅடி நீர், குடிநீருக்கு வெளியேற்றுவதால், நீர்மட்டம் மளமளவென சரிந்து வருகிறது.இருப்பு குறைவாக இருப்பதால், வரும், 12ல், அணையிலிருந்து, குறுவை சாகுபடிக்கு நீர்திறக்க வாய்ப்பு குறைவு. அதற்கேற்ப, ஏற்காட்டு கோடைவிழாவை துவங்கிவைத்த, தமிழக முதல்வர் பழனிசாமி, ‘மேட்டூர் அணையில் குறைந்தளவே தண்ணீர் உள்ளது’ என கூறியுள்ளதன் மூலம், சூசகமாக, டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார்.இதனால், டெல்டா மாவட்டங்களில், தொடர்ந்து, ஏழாவது ஆண்டாக குறுவை சாகுபடி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது, விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
-தினமலர் சிறப்பு நிருபர்-

இவ்வாண்டும் வருண பகவானை நம்பியே நம் விவசாயிகளின் நிலை அமைந்துள்ளது. தண்ணீர் கிடைக்காவிட்டால் கீழேயுள்ள இச் செய்தி மிகவும் கவனத்துக்குரியது ’’குறைந்துவரும் நெல் சாகுபடி: தண்ணீர் தர மறுக்கும் மாநிலங்களிடம் நெல்லுக்கு கையேந்தும் அவலம்’’

Exit mobile version