Site icon Vivasayam | விவசாயம்

புதிய தொழில்நுட்பத்தில் எள் சாகுபடி

குறிஞ்சிப்பாடி உழவர் மன்ற விவசாயிகள் புதிய தொழில்நுட்பத்தில் (நடவு முறையில்) எள் சாகுபடி செய்துள்ளனர்
குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் சுமார் 2 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் எள் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் நிலம் நன்கு புளுதியாக்கப்பட்ட பின்னர் பாத்தி கட்டி எள் விதைக்கப்படும். பின்னர், களை எடுப்பின்போது, குறிப்பிட்ட இடைவெளியில் செடிகளை விட்டுவிட்டு இதர செடிகளை எடுத்து விடுவது வழக்கம். தற்போது, குறிஞ்சிப்பாடி உழவர் மன்ற விவசாயிகள் 30-க்கும் மேற்பட்டோர், தங்களது நிலத்தில் புதிய தொழில்நுட்ப முறையில் எள் நடவு செய்துள்ளனர். இதன் மூலம் ஏக்கருக்கு 8 முதல் 10 மூட்டைகள் வரை எள் மகசூல் கிடைக்கும் என உறுதிபடக் கூறுகின்றனர்.

இதுகுறித்து குறிஞ்சிப்பாடி பகுதி விவசாயிகள் தெரிவித்தாதவது,
சாதாரண முறையில் நிலத்தை நன்கு உழுது எள் விதைக்கப்படும். இதில் ஏக்கருக்கு 4 மூட்டை எள் கிடைக்கும்
.
ஆனால், நாங்கள் 2 அடிக்கு 2 அடி பார் பிடித்து, அரை அடி இடைவெளியில் எள்ளை கையால் நடவு செய்வோம். தண்ணீர் கட்டி 3-ஆம் நாள் களைக்கொல்லி மருந்துத் தெளித்து களையை கட்டுப்படுத்துவோம். 15 நாள்களுக்குப் பின்னர் குத்துக்கு ஒரு செடியை மட்டும் விட்டு விட்டு மற்றச் செடிகளை களைந்துவிடுவோம்.
இந்த முறையில் செடிகள் நன்கு செழித்து வளரும். ஒரு சதுர மீட்டருக்கு சராசரியாக 9 செடிகள் வரை வளரும். பூக்கும் தருணம், காய்ப் பிடிக்கும் தருணம் என இரண்டு முறை டிஏபி கரைசல் தெளிப்போம்.
எண்ணெய்ச் சத்து அதிகரிப்பதற்காக 4 கிலோ மாங்கனீசு சல்பேட்டை அடியுரமாக எருவுடன் கலந்து இடுவோம். இந்த புதிய முறைப்படி எள் சாகுபடி செய்தால் ஏக்கருக்கு குறைந்தபட்சம் 8 முதல் 10 மூட்டைகள் வரை மகசூல் கிடைக்கும் என்றார் அவர்.

Exit mobile version