Site icon Vivasayam | விவசாயம்

விவசாயிகள் தின நாளில், விவசாய திட்டக்குழு அமைப்போம்!

விவசாயம் செய்யும், மனதால் விவசாயம் செய்துகொண்டிருக்கும் அனைவருக்கும் விவசாயிகள் தின நல்வாழ்த்துகள்.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 23-ம் தேதி ‘தேசிய விவசாயிகள் தினமாக’ கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் பிறந்த நாளே கடந்த 16 ஆண்டுகளாக விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பல்வேறு நெருக்கடியான அரசியல் சூழல்களுக்கிடையே ஜூலை 1979-ம் ஆண்டு, இந்தியாவின் 5-வது பிரதமராக பதவியேற்ற சரண் சிங். 7 மாதங்கள் ஆட்சியில் இருந்தபோது  ‘ஜமீன்தாரி ஒழிப்புமுறை,  நிலச் சுவான்தார்கள், வட்டிக்கு பணம் வழங்குவோர் மீது கடும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும், விமர்சனங்களையும் முன்வைத்தவர் சரண்சிங்.

அவருடைய ஆட்சியின்போதே விவசாயிகளின் விளைபொருள் விற்பனைக்காக ‘வேளாண் விளைபொருள் சந்தை மசோதா’வையும் அறிமுகப்படுத்தினார். இதுதான் அவர் ஆட்சியின் போது விவசாயிகளின் நலன்களுக்காக கொண்டுவரப்பட்ட முக்கிய அம்சங்கள். அதனாலயே அவருடைய பிறந்த நாள் விவசாயிகள் நாளாக கொண்டாடப்படுகிறது.

சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்

உழந்தும் உழவே தலை.

இயற்கை  விவசாயம்  (இயற்கை விவசாயம் என்பதே தவறு என்றுதான் நானும் சொல்வேன்., அதை நஞ்சில்லா விவசாயம் என்றே அழைக்கலாம்.) பற்றி பெருகிவரும் விழிப்புணர்வு ஒருப்புறம் மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் இது போதாது என்றே தோன்றுகிறது. அரசின் மானியத்திட்டம் அனைத்து மூலையில் இருக்கும் விவசாயிகளுக்கும் சென்று சேர்க்கிறதா என்றால் இல்லை. அது நடைமுறையில் உள்ள சிக்கல்.

ஆனால் அரசாங்கம் நாள்தோறும் பல்வேறு வகையான திட்டங்களை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தும் வண்ணமே உள்ளது. இன்னமும் அது சரியான அளவில் மக்களிடையே கொண்டு சேர்வதில் பெரும் சிக்கலாக உள்ளது. எனவே உள்ளூரிலேயே விவசாயிகள் மற்றும் விவசாய செய்ய ஆர்வம் உள்ள நண்பர்கள் அனைவரும் தங்களுக்குள்ளே விவசாய திட்டக்குழு குழு அமைத்து மாதந்தோறும் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் பகுதியில் தங்களுக்குத் தேவையான சந்தேகங்களை, தங்கள் பகுதிக்கு தேவையான வசதிகளை கேட்டுப்பெற வேண்டுகிறோம். ஏனெனில் நடைமுறை சிக்கலில்சில தகவல்கள் நமக்கு வந்து சேராது. எனவே நாம் முறைப்படி மாவட்ட ஆட்சியிரின் தலைமையில் நடைபெறும் விவசாய குறை தீர் கூட்டங்களில் கலந்துகொண்டு அந்தந்தப் பகுதிக்கு தேவையான வசதிகளை நாம் அரசாங்கத்திடம் கேட்டு செயல்படுத்துவோம். ஏனெனில் நமக்க உதவிடவே அரசாங்கம். அந்த அரசாங்கத்தினை நாம் முறைப்படி அணுகுவேண்டும். அதற்கு அந்தந்த ஊரில் விவசாய திட்டக்குழு அமைப்பது அவசியம்.

விவசாயத்தில் ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் உடனடியாக செயல்படுத்தவேண்டிய திட்டம் இது. இந்தக்குழுவினை அமைப்பதில் உங்களுக்கு சந்தேகம் ஏதேனும் இருந்தால் உடனே உங்களுக்கு உதவுவதில் நாங்கள் மகிழ்கிறோம்

அனைவருக்கும் இனிய விவசாயிகள் தின நல்வாழ்த்துகள்..

என்றும் அன்புடன்

செல்வமுரளி,

ஆசிரியர்

விவசாயம் -அக்ரிசக்தி

Exit mobile version