Site icon Vivasayam | விவசாயம்

விவசாயி, விவசாயியாகவே இருக்கட்டும் – மாயவரத்தான்

விவசாயம் செயலியின் சார்பில் விவசாயத்தினை மேம்படுத்த என்ன செய்யலாம் என்று ஒவ்வொருவரின் கருத்துக்களையும் வாங்கி மக்களிடையே கொண்டு சேர்த்திட உதவும் புதிய பகுதியாக கருத்துக்களம் என்ற புதிய பிரிவு துவக்கப்பட்டுள்ளது.
இதன் தொழில்துறை, விவசாயம் செய்பவர்கள், ஊடகத்துறை, மாணவ/மாணவியர், ஆசிரியர் என எல்லாத்தரப்பினிரின் கருத்துக்கள் கொண்ட ஒரு பெருந்தரவகம் உருவாக்கப்பட உள்ளது. அதில் மாயவரத்தான் என்றழைக்கப்படும் திரு.ரமேஷ்குமாரின் ( முதல் கருத்து இங்கே இடம் பெற்றுள்ளது

விவசாயம் உயர உங்களின் கருத்து என்ன ?

விவசாயம் உயர விவசாயத்தினை விவசாயிகள் மட்டுமே பார்க்க விடுங்கள். அரசியல்வாதிகளோ, தொழில் முனைவர்களோ அதில் ஈடுபட்டு அவர்களையும் அரசியல்வாதியாகவோ, விவசாயத்தினைக் கைவிட்டுச் செல்லும் தொழில் முனைவராகவோ மாற்ற வேண்டாம்.

விவசாயம் என்பது  மிக மிக உயர்வான தொழில், விவசாயிகள் மட்டும்  விவசாயத்தினை பார்த்துக்கொண்டிருந்தால்  போதும்

விவசாயிகள் என்ன செய்ய வேண்டும்?

 

விவசாயிகள், பரம்பரரை பரம்பரையாக தங்கள் முன்னோர்கள் கற்றுக்கொடுத்த நஞ்சில்லா விவசாயத்தினை முன்னெடுத்தாலே போதும், அதை விட்டுவிட்டு நவீன தொழில்நுட்பம் வழியாக அதை  இதை செய்யறோம், அதிக பணம் ஈட்டலாம் என்று சொல்லி விவசாயி தன் விளை நிலத்தினை பாழ்படுத்தினால் தொடர்ந்து விவசாயம் செய்ய முடியாது என்பதை விவசாயிகள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

 

விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர அரசாங்கம் என்ன செய்யவேண்டும்?

 

விவசாயிகளை அரசாங்கம் தொந்தரவு செய்யாமல் இருந்தாலே போதும்

 

 

 

விவசாயிகளை காக்க பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?

 

விவசாயப்பொருட்களை ஒழுங்கான விலை கொடுத்து வாங்கவேண்டும், ஆண்டுதோறும் நமக்கு சம்பள உயர்வு எதிர்பார்க்கும் நாம் நாம் சாப்பிடும் பொருட்களான அரிசி, பருப்பு, பால், கீரை விலை உயரக்கூடாது என்று எதிர்பார்ப்பதும், அரிசி, பருப்பு போன்றவற்றை மானிய விலையில்தான் தரவேண்டும் என்று நாம் அனைவரும் நினைத்தால் அதை வாங்கும் அரசாங்கமும், தனியார் நிறுவனங்களும்  விவசாயிகளின் பொருட்களுக்கு ஒழுங்கான விலையை கொடுக்க மாட்டார்கள் , விவசாயிகளிடமும் குறைந்த விலையிலயே வாங்க முயற்சிப்பார்கள்.

அதனால் விவசாயிகளுக்குத்தான் பாதிப்பு வரும்.  எனவே அரசாங்க மானியத்தில்தான் அரிசி கொடுக்கணும் என்று நினைப்பது மிக தவறான ஒன்று. பிஸ்ஸா சாப்பிடும் ஒருவர் மானியத்தில் கொடுப்பார்களா என்று  பார்ப்பதில்லை, உண்மையிலயே கஷ்டப்படுகிறவர்களுக்கு அரசாங்கம் மானியம் கொடுப்பதில் தவறில்லை.

ஆனால்  மீதியுள்ள மக்களும் எல்லாத்தையும் மானியத்தில் வாங்கவேண்டும் என்பது நினைப்பது தவறு. வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்கள் அதற்குரிய விலையை கொடுத்து வாங்கினாலே விவசாயம் செழிப்படையும் விவசாயத்தினை நம்பி செய்ய பலர் முன்வருவார்கள்.

முக்கியமாக விவசாயி்களிடமே நேரடியாக வாங்கினால் விவசாயிகள் இன்னமும் பலன் பெறுவார்கள்,  அரசாங்க கொள்முதல் கழகம்போன்றவை  தானியங்கள் அதிக விளைச்சலில் இருந்து வீணாக செல்வதாக இருந்தால் அங்கே அரசாங்க கொள்முதல் மிக அத்தியாவசிய தேவையாக இருக்கும்,  ஆனால் இப்போது  அப்படியா இருக்கிறது?

திரு.மாயவரத்தானின் கருத்துக்களுக்கு உங்கள் மறு மொழியையும் கீழே கொடுத்துள்ள மறுமொழி பொத்தான் மூலம் வழங்கலாம்.
நீங்களும் இந்த கருத்துக்களத்தில் பங்கேற்கவேண்டுமா? உடனே எங்களுக்கு மின்னஞ்சல்  (editor.vivasayam@gmail.com அனுப்புங்க)

Exit mobile version