Site icon Vivasayam | விவசாயம்

பூனை மீசை!

ஒவ்வொரு தாவரமுமே ஒரு மருத்துவப் பண்பைக் கொண்டிருக்கிறது. நம் முன்னோர், இந்தத் தாவரம் குறிப்பிட்ட வியாதியைக் குணப்படுத்தும் எனக் கண்டுபிடித்து வைத்திருப்பது மிகப் பிரமிப்பான விஷயம். ஆனால் நாம் அவற்றைத் தெரிந்துகொள்ளத் தவறிவிட்டோம் என்பது வேதனையான உண்மை. அப்படிப்பட்ட தாவரங்கள் குறித்த புரிதலையும் அவற்றைப் பயன்படுத்தும் விதத்தையும் இத்தொடர் மூலமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இத்தொடரில் உள்ள தகவல்கள் அனைத்தும் மூல நூல்களைத் தழுவியே இருக்கும் என்பதால், இதைக்கொண்டு சுய மருத்துவம் செய்துகொள்ள இயலும்.பூனை மீசை எனும் மூலிகை குறித்துப் பார்ப்போம்

       பூனை மீசை எனும் மூலிகைக்கும் சிறுநீரகச் கற்களைக் கரைக்கும் தன்மையுள்ளது. தவிர இது, ஆரம்பக்கட்ட சிறுநீரகப் புற்று நோயையும் குணமாக்குகிறது. இது, கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்னர், ஜாவா நாட்டில் இருந்து அலங்காரச் செடியாக நமது நாட்டுக்கு அறிமுகம் ஆனது. இதனுடைய பூக்கள், பூனை மீசை போன்றும் இலைகள் துளசி இலை போன்றும் இருப்பதால், இதைப் ‘பூனை மீசை துளசி’ என்னும் அழைக்கிறார்கள்.

       இச்செடியை பச்சையாக ஒரு கைப்பிடியளவு (100 கிராம்) எடுத்து ஒன்றிரண்டாக இடித்தோ அல்லது அரைத்தோ 1 லிட்டர் தண்ணீரில் இட்டு 125 மில்லியாகச் சுண்டும் வரை காய்ச்ச வேண்டும். இக்குடிநீர், சிறுநீரகச் செயலிழப்பு நோயாளிகளுக்கு நல்ல மருந்து. இதன் வணிகப் பெயர், ‘ஜாவா டீ’. இதன் தண்டுகளைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துப் பதியன் போட்டு செடிகளைப் பெருக்க முடியும்.

     இதை மூலிகைக் குடிநீராக ஜப்பான், மலேசியா போன்ற நாடுகளில் பயன்படுத்துகிறார்கள். இது உடலில் உள்ள நச்சுகளை நீக்குவதாகச் சொல்கிறார்கள். இக்குடிநீரில் 35 வகையான வேதிப்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. அது குறித்த ஆய்வுகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

      மலேசியா நாட்டில், சிறுநீரகக் கல்லடைப்பு, பித்தப்பைக் கல், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மூட்டுவாதம் போன்ற நோய்களைக் குணமாக்க பூனை மீசை பயன்படுத்தப்படுகிறது. இது உடலின் உயிர் வேதியியல் நிகழ்வை (மெட்டபாலிசம்) வேகப்படுத்தும் தன்மையைக் கொண்டுள்ளதால், அதிகளவு கலோரிகளை எரித்து அதிக வியர்வையை வெளியேற்றும் தன்மை கொண்டுள்ளது.

     பூனை மீசை, விஷ நாராயணி ஆகிய இரு மூலிகைளையும் தொட்டியில்கூட வளர்க்க முடியும்.

     நம் வாழ்வில் நலம் பெற உதவும் மூலிகைகளை உதாசீணப்படுத்தாமல் உபயோகப்படுத்தி நலமுடன் வாழ்வோம்.

நன்றி பசுமை விகடன்

Exit mobile version