Site icon Vivasayam | விவசாயம்

ஒட்டுச் செடிகள்

வணிகமுறை இனப்பெருக்கமுறைகளில் ஒன்றான செடி வளர்ப்பு.

செடியின் கிளையை வளைத்து மண்ணில் நுழைத்து அதன் மேல் மண்ணிட்டு பின் தொடந்து நீர்ப்பாய்ச்சினால், மண்ணில் நுழைக்கப்பெற்ற பகுதியின் அடியில் புத்தும் புதிய வேர்கள் உருவாகும்; அதன் விளைவாக புதியச்செடி துளிர்க்கும். துளிர்விட்ட புதிய செடி ஓரளவிற்கு வளர்ந்தவுடன் அச்செடி மண்ணிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு தனிச்செடியாக வளர்க்கப்படும்.

ஒட்டுக்கட்டுதலின் போது தாய்ச்செடியிலும் வேர்ச்செடியிலும் ஒரே மாதிரியான காயங்கள் ஏற்படுத்தி இணைத்துப் பின்னர் துணியினால் அல்லது பாலீதீன் பேப்பர் மூலம் கட்டி விடுவர்.

4 ஆண்டுகள் கடந்தும்… காய்ப்புக்கு வராது ஒட்டுரகச் செடிகள்?”

எங்கள் தோட்டத்தில் ஒட்டுரக எலுமிச்சைச் செடிகளையும் சில மாஞ்செடிகளையும், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடவு செய்தோம். ஆனால், இன்னும் செடிகள் காய்ப்புக்கு வரவில்லை. என்ன காரணம்?”

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி எலுமிச்சை விவசாயி ‘புளியங்குடி’ அந்தோணிசாமி பதில் சொல்கிறார்.

என்னுடைய அனுபவத்தில் ஒட்டுக்கட்டப்பட்ட எலுமிச்சை ரகங்கள் இரண்டே வருடத்திலும், மா ரகங்கள் மூன்று வருடத்திலும் காய்ப்புக்கு வந்துவிடும். அப்படி காய்ப்புக்கு வரவில்லை என்றால், அதற்கு முக்கியக் காரணம் ஒன்றுதான் இருக்க முடியும். உதாரணத்துக்கு எலுமிச்சையின் தாய்ச்செடிகள் காட்டுப்பகுதியில் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய ரகத்தைத் தேர்வு செய்திருப்பார்கள். இதன் மேல்பகுதியில் ஒட்டுக்கட்டும் ரகம்தான் நல்ல விளைச்சல் கொடுக்கும் தன்மை கொண்டது.

எலுமிச்சைச் செடிகளை நடவு செய்தவுடன் அடியில் உள்ள தாய்ச்செடிகளை வளரவிடக்கூடாது. அப்படி வளரவிட்டால், ஒட்டுக்கட்டப்பட்ட பகுதியில் உள்ள செடி வளராமல், தாய்ச்செடி வளர்ந்துவிடும். இதனால், செடியும் காய்ப்புக்கு வராது. இது எலுமிச்சைக்கு மட்டுமல்ல; மா, சப்போட்டா… என ஒட்டுக்கட்டப்படும் அனைத்து தாவரங்களுக்கும் பொருந்தும், ஒட்டுச்செடிகள் நடவு செய்பவர்களுக்கான பாலபாடம் இது. மேலும், ஒட்டு ரக எலுமிச்சையை நடவு செய்த ஒரு வாரம் வரை, செடியின் மூட்டைச் சுற்றி தினமும் காலால் மிதித்து விட வேண்டும். அளவுக்கு அதிகமாகவோ குறைவாகவோ தண்ணீர் பாய்ச்சக் கூடாது. மண்ணின் ஈரப்பதத்தைப் பார்த்துப் பக்குவமாகப் பாசனம் செய்ய வேண்டும்.

நடவு செய்த 40-ம் நாளில் தளிர் வரும். அந்த நேரத்தில் வண்ணத்துப்பூச்சிகள் தாக்குதல் வரலாம். அவை, எலுமிச்சை இலைகளை உண்ணக்கூடும். 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீர், 100 மில்லி வேப்பெண்ணெய் என்ற விகிதத்தில் கலந்து தெளித்தால் வண்ணத்துப்பூச்சி தாக்காது. தொடர்ந்து, 20 நாள்களுக்கு ஒருமுறை இப்படிப் பூச்சிவிரட்டி தயாரித்துத் தெளிக்க வேண்டும்.

அவ்வப்போது தேவைக்கேற்ப களை எடுத்து வர வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மரத்தின் மூட்டில் இருந்து ஓர் அடி தள்ளி, 20 கிலோ ஆட்டு எரு, ஒரு கிலோ வேப்ப முத்து, ஒரு கிலோ மண்புழு உரம் ஆகியவற்றைக் கலந்து இட வேண்டும். வேறு பராமரிப்புகள் தேவையில்லை. நல்ல ரகமாக இருந்தால் ஒரு செடியிலிருந்து வருடத்துக்குச் சராசரியாக 200 காய்கள் முதல் 300 காய்கள் வரை கிடைக்கும். இங்குச் சுட்டிக்காட்டியுள்ள தொழில் நுட்பங்களைக் கவனமாகப் பின்பற்றவும்.

ஒரு வேளை உங்கள் தோட்டத்தில் உள்ள எலுமிச்சைச் செடிகளில், தாய்ச்செடிகள் தழைத்து வந்திருந்தால், அதை வெட்டி எறிந்துவிட்டு, புதிய செடிகள் நடுவதுதான் சிறந்த முறை. அதேசமயம், மா ஒட்டுச்செடிகளில் தாய்ச்செடிகள் வளர்ந்திருந்தால், தகுந்த வல்லுநரைக் கொண்டு, உங்களுக்குத் தேவையான ரகத்தை மீண்டும் ஒட்டுக்கட்டி, மாஞ்செடிகளை காய்ப்புக்குக் கொண்டு வர முடியும்.”

நன்றி

அந்தோணி சாமி

பசுமை விகடன்.

Exit mobile version