Site icon Vivasayam | விவசாயம்

சுற்றுசூழல் சவால் – நியாண்டர் செல்வன்!

தமிழகம் இன்று சந்திக்கும் மிகப்பெரிய சவால் சுற்றுசூழல் தான்.

ஆற்றுமணல் திருட்டு, மரங்கள், நீர் நிலைகள் அழிக்கபடுதல், கட்டுப்பாடின்றி வீடுகளை கட்டி ஏரிகள், குளங்களை ஆக்கிரமித்தல் ஆகியவை தொடர்ந்தால் பொருளாதார வளர்ச்சி, இந்தியாவின் முதன்மை மாநிலம் என எதை பேசியும் எந்த பயனும் கிடையாது. நீரில்லாத ஊரில் மைசூர் மகாராஜா பேலஸே இருந்தாலும் அதில் எப்படி குடியிருக்க முடியும்? இயற்கைவளம் அழிந்தால் அதன்பின் வேறு எதைபற்றி பேசியும் எந்த புண்ணியமும் இல்லை.

முதல் கட்டமாக உங்கள் வீடுகளில் மரங்கள் நடும் இடம் இருந்தால் அங்கே ஒரு மரத்தை நடுங்கள். பழம் கிடைக்கும் என கருதி தென்னை, வாழை மரங்களை நடவேண்டாம். தென்னை மரம் வளர நீண்ட நாள் பிடிக்கும். வாழைக்கு ஏராளமான நீர் அவசியம். வெயிலுக்கு தாக்குபிடித்து, நிழல் தந்து சுற்றுசூழலுக்கும் உகந்த வேப்பமரம், அரசமரம், ஆலமரம் மாதிரியான மரங்களை நடுங்கள். வசதியும், வாய்ப்பும் உள்ளவர்கள் வனத்துக்குள் திருப்பூர் மாதிரி திட்டங்களை பல ஊர்களில் முன்னெடுக்கவும். வீடு நிறைய மரம் இருந்தால் ஏசி அவசியமே இல்லை. எத்தனை காசு மிச்சம் என யோசிக்கவும் ????

அடுத்ததாக உங்கள் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு முறையை அமைக்கவும். கடைசிக்கு மழைநீரை பீப்பாய்களில் சேகரித்து செடிகளுக்காவது ஊற்றவும்.

இது அனைத்தையும் விட முக்கியமாக வீடுகள் கட்டுகையில் ஆகிரமிக்கபட்ட நிலங்கள், ஏரி,குளம் இருக்கும் பகுதிகள் என தெரிந்தால் அதை தவிர்க்கவும். வீடுகளை ஆற்று மணலை பயன்படுத்தி கட்டவேன்டாம். கேரளாவில் எம். மணல் (M-sand, manufactured sand) என்ற செயற்கை மணலை பயன்படுத்தி வீடுகளை கட்டுகிறார்கள். எம்-மணல் ஆற்றுமனலுக்கு 100% ஒப்பானது என கட்டிட நிபுணர்கள் கூறுகிறார்கள். ஜிப்சம் போன்ற பிற பொருட்களும் மணலுக்கு பதில் பல நாடுகளில் பயனாகின்றன. இதுபோன்ற சாத்தியகூறுகளை எஞ்சினியர்களும், பிற தொழில்நுட்ப வல்லுனர்களும் ஆராயவேண்டும். வீடுகளில் செம்மண், களிமண் போன்றவற்றை பயன்படுத்தும் சாத்தியக்குறும் ஆராயலாம். மிகப்பெரிய மாளிகைகளை கட்டுவதை விட குறைந்த அறைகளை கொண்டு, சின்ன சைஸ் வீடுகளாக கட்டலாம். செலவுக்கு செலவும் மிச்சம், உள்ளேயும் குளு, குளூ என இருக்கும்.

முக்கியமா அண்டைவீட்டார் மரம் வளர்த்தால் அதன் இலை எங்க வீட்டுக்கு வருது, கிளை காம்பவுண்டு சுவரில் நீளுது என புகார் சொல்லி அதை வெட்ட வைப்பதை தவிர்க்கலாம். இம்மாதிரி அர்த்தமற்ற அண்டைவீட்டு சண்டைகளால் எத்தனை மரங்கள் வெட்டபடுகின்றன என்பதற்கு கணக்கே இல்லை.

பிளாஸ்டிக் தட்டு, டம்ளர் பயன்பாடு, அலங்கார பொருட்கள் ஆகியவற்றை தவிர்க்கவும். பிளாஸ்டிக் மாதிரி மாசுபடுத்தும் பொருள் உலகில் எதுவும் இல்லை. காகிதம், சணல் மாதிரி பழைய கால டெக்னாலஜிக்கு மாறவும்

Exit mobile version