Site icon Vivasayam | விவசாயம்

கழிவு நீரை மறுசுழற்சி செய்வது எப்படி?

பசுமை விகடனில் வெளிவந்த பேட்டி…

சிக்ரி (CECRI) இயக்குநர் விஜயமோகன் பிள்ளையிடம் பேசினோம். “தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், கழிவுநீரை மறுசுழற்சி செய்வது தொடர்பான ஆராய்ச்சியை எங்கள் மைய விஞ்ஞானிகள் மேற்கொண்டார்கள். ஆய்வின் முடிவில் மிகவும் குறைந்த செலவில் கழிவுநீரைச் சுத்திகரிக்கும் தொழில்நுட்பம் கண்டறியப்பட்டு, செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த ஆலையில் கிராபைட் மிதவை முறையில் பிரிக்கும்போது, மிக நுண்ணியக் கிராபைட் துகள்கள் (5 முதல் 6 மைக்ரான் அளவு) நீருடன் கலந்து வெளியேறுகின்றன. வழக்கமாக ‘ஆலம்’ என்ற வேதிப்பொருளைப் பயன்படுத்தி நீரில் கலந்துள்ள நுண்ணியத் துகள்களை அகற்றும் முறைதான் பயன்படுத்தப்படும். ஆனால், அந்த முறையில் சுத்திகரிக்கப்பட்ட நீரை மறுசுழற்சி செய்யும்போது, குழாய்களில் அடைப்பு ஏற்படும்.

அதற்கு மாற்றாக சிக்ரி விஞ்ஞானிகள் ஒரு தொழில்நுட்பத்தைக் கண்டறிந்து கொடுத்துள்ளார்கள். அந்த ஆய்வின்படி, ஆக்சிஜனேற்றம் தரும் வேதிப்பொருளை கழிவுநீரில் கலக்கும்பொழுது, நுண்துகள்கள் அடிப்பகுதிக்குச் சென்றுவிடுகின்றன. இதனடிப்படையில், ஆலையிலிருந்து வெளியாகும் கழிவுநீர், தொட்டிகளில் சேகரிக்கப்பட்டு அதில் ஆயிரம் லிட்டருக்கு 1.25 கிராம் என்ற அளவில் பொட்டாசியம் பெர்மாங்கனேட் என்ற ரசாயன வேதிப்பொருளைச் சேர்த்து கம்ப்ரஷர் மூலமாகக் காற்றைச் செலுத்தி கலக்கிவிட்டு 24 மணி நேரம் தெளிய விடப்படுகிறது. தெளிந்த நீர் பிறகு, ஆலைப் பயன்பாட்டுக்காக எடுத்துச் செல்லப்படுகிறது. கழிவுநீரைச் சுத்திகரிக்கும் முறை, ஒவ்வொரு ஆலையிலும் அதன் பயன்பாட்டைப் பொறுத்து வேறுபடும். ஆலைகளில் கழிவுநீரைச் சுத்திகரிக்க விரும்புபவர்கள் எங்கள் ஆராய்ச்சி மையத்தை அணுகலாம்” என்றார்.

தொடர்புக்கு:

தொலைப்பேசி : 04565 241522

Exit mobile version