Site icon Vivasayam | விவசாயம்

நிலக்கடலை ஊடுபயிரில் உன்னத வருமானம்..!

”நிலக்கடலையின் வயல் வரப்புகளில் 30 சென்டிமீட்டர் இடைவெளியில் உளுந்தை விதைத்துவிட்டால் அசுவினி, அந்துப்பூச்சி, சாறு உறிஞ்சும் பூச்சி ஆகியவை உளுந்துச் செடிகளில் அமர்ந்துகொள்ளும். இதனால் முதன்மைப்பயிரான நிலக்கடலையில் பூச்சித்தாக்குதல் இருக்காது. உளுந்துக்கு மாற்றாகத் தட்டைப்பயறு, பாசிப்பயறு ஆகியவற்றையும் விதைக்கலாம். இதன் மூலம் தனியாக ஒரு வருமானம் பார்த்துவிடலாம்” என்கிறார், நாராயணன்.

உயிர்வேலி மூலம் மாத வருமானம்..!

”நிலக்கடலை வயலைச் சுற்றி உயிர்வேலி மாதிரி 6 அடி இடைவெளியில் அதிக விளைச்சல் கொடுக்கிற சிற்றாமணக்கு வகையைச் சேர்ந்த ஆமணக்குச் செடிகளை வைத்திருக்கிறேன். இதை நட்டு 8 மாதம் ஆகிறது. நட்ட இரண்டாவது மாதத்தில் இருந்து விதைகள் கிடைத்துக் கொண்டு இருக்கிறது. 5 வருடம் வரை விதைகள் கிடைக்கும் ஆனாலும், 2 வருஷத்துக்கு மேல செடிகள் ரொம்ப வளர்ந்திடும். அதனால் இரண்டு வருடத்தில் செடிகளை அழித்திடுவேன். அதற்குள் காய்ப்புக்கு வரும் மாதிரி சுழற்சி முறையில் ஆமணக்குச் செடிகளை வைத்திடுவேன். வரப்போரங்களில் இந்தச் செடிகள் இருப்பதால் நிலக்கடலையைத் தாக்க வரும் பூச்சிகள், இந்தச் செடிகளிலேயே தங்கிவிடும். அதனால் நிலக்கடலைச் செடிகள் பங்கமில்லாமல் முளைத்து வரும்.

அதில்லாமல் மாதத்துக்கு 60 கிலோ ஆமணக்கு விதை கிடைக்கும். அதில் 30 கிலோ விதையை ஆட்டினால், 10 லிட்டர் விளக்கெண்ணெய் கிடைக்கும். அதை கிலோ 1,200 ரூபாய்னு விற்பனை செய்வதன் மூலம், மாதம் 12 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது. மீதி 30 கிலோ விதையை கிலோ 75 ரூபாய் என்று விற்பனை செய்கிறேன். அதன் மூலமாக 2 ஆயிரத்து 250 ரூபாய் கிடைக்கும். வரப்போர பயிர்களில் இருந்தே மாதா மாதம் 14 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாமல் வருமானம் கிடைக்கிறது.

இதுபோக நிலக்கடலை விதைத்ததும். பாத்திகளுக்குள் 6 அடி இடைவெளியில் மக்காச்சோள விதைகளை விதைத்து விடுவேன். இதுவும் பூச்சிக்கட்டுப்பாட்டிற்கு உதவியாக இருக்கும். அதில் பறவைகள் சாப்பிட்டது போக மீதி கிடைக்கிற கதிர்களை வீட்டுத்தேவைக்கு வைத்துக்கொள்கிறேன்” என்கிறார், நாராயணன்.

நன்றி

பசுமை விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Exit mobile version