Site icon Vivasayam | விவசாயம்

வறட்சியை தாங்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு !

நாட்டு ரக சர்க்கரைவள்ளி கிழங்கின் வயது 3 மாதங்கள். நடவுக்கேற்ற பருவம். அக்டோபர் – டிசம்பர் மாதங்களாகும். தண்ணீர் தேங்காத வடிகால் வசதியுள்ள மண் வகை ஏற்றது. அனுபவ விவசாயி திருவண்ணாமலை மாவட்டம் சம்மந்தனூர் குப்புசாமி. இவர் 70 சென்ட் சாகுபடி நிலத்தில் தண்ணீர் கட்டி கொக்கி கலப்பையில் உழவு செய்து 2 டிப்பர் எருவைக் கொட்டி கலைத்து விட்டு பின்னர் மண் பொலபொலப்பாகும் வரை ரோட்டோவேட்டர் மூலம் இரண்டு சால் உழவு செய்து, மாட்டு ஏர் பூட்டி ஓர் அடி இடைவெளியில் ஒன்றேகால் அடி அகலத்துக்கு பார் பிடித்து தண்ணீர் கட்டி, பார்களின் இருபுறமும் அரையடி இடைவெளியில் இளம் சர்க்கரைவள்ளி கொடிகளை நடவு செய்துள்ளார்.

கொடிகளின் நீளம் முக்கால் அடி இருக்க வேண்டும். 5 சென்ட் நிலத்தில் உள்ள கொடிகளை வெட்டினால் 70 சென்ட் நிலத்திற்கு நடலாம். ஒரு மாதம் வரை நாற்று வளர்த்த கொடிகளையும் நடலாம். நடவு செய்த 7ம் நாளில் வேர் பிடித்து வளரத்துவங்கும். 15ம் நாளில் களைகொத்து கொண்டு களை எடுத்து பரிந்துரைக்கப்பட்ட உரத்தைத் தூவி தண்ணீர் கட்ட வேண்டும். 30ம் நாளில் வேர்களில் கிழங்கு பிடிக்க ஆரம்பிக்கும். 60ம் நாளில் விரல் அளவுக்கு பெருத்து விடும். பரிந்துரைக்கப்பட்ட உரத்தை இட்டு தண்ணீர் கட்ட வேண்டும்.

லேசான மழை அல்லது பனி இருந்தால் உரம் இடக்கூடாது. வெயில் நேரத்தில் தான் உரம் இடவேண்டும். 7 முதல் 10 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் கட்டினால் போதும். பூச்சிநோய் தாக்குதல் பெரும்பாலும் இருக்காது. 90 நாட்களுக்கு மேல் கிழங்கை தோண்டி பார்த்து முற்றிய நிலையில் அறுவடை செய்யலாம். முதலில் மண்ணிற்கு வெளியில் உள்ள கொடிகளை அறுத்து விட்டு மாட்டு ஏர் மூலம் பாரில் ஆழமாக உழுதால் கிழங்குகள் வெளியில் வந்து விடும். முதல் 50 சென்டில் அறுவடை செய்ததில் 45 மூட்டை கிழங்கு கிடத்தது. ஒரு மூட்டை 800 ரூபாய்க்கு விற்பனை செய்ததில் 36 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. 70 சென்டில் மொத்த வருமானம் 45 ஆயிரத்து 600 ரூபாய் கிடைத்தது. எல்லா செலவும் போக 30 ஆயிரம் ரூபாய் மிஞ்சியது. தொடர்புக்கு: குப்புசாமி, செல்போன்: 99431 63088.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Exit mobile version