Site icon Vivasayam | விவசாயம்

இ.எம் தயாரிக்கும் முறை !

20 லிட்டர் கொள்ளளவுள்ள மூடியுள்ள டிரம் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில், 17 லிட்டர் குளோரின் கலக்காத தண்ணீர் (போர்வெல் தண்ணீர்) ஊற்றிக்கொள்ள வேண்டும். 2 கிலோ கருப்பட்டியைக் காய்ச்சி பாகு பதத்துக்கு மாற்றி, தண்ணீரில் கலந்து கொள்ள வேண்டும். அத்துடன் ஒரு லிட்டர் இ.எம் கரைசலை (முதல்முறை தயாரிக்கும் போது, வெளியில் இருந்து வாங்கிக் கொள்ளலாம். அடுத்த முறை நாம் தயாரிக்கும், இ.எம் கரைசலையே பயன்படுத்திக் கொள்ளலாம்) கலந்து.. மூடியால் மூடி, வெயில் படாத இடத்தில் டிரம்மை வைத்து விட வேண்டும்.

தினமும் ஒருமுறை, மூடியை லேசாகத் திறந்து உடனே மூடி விட வேண்டும். இதனால், நொதிக்கும் திறன் அதிகரிக்கும். 10 நாள் கழித்து மூடியைத் திறந்து பார்த்தால், மேல் பகுதியில், வெள்ளை நிற ஏடு போன்று படிந்திருக்கும். இனிப்பு கலந்த ஒரு வாடை வரும். இந்தக் கலவைதான் செறிவூட்டப்பட்ட திறன்மிகு நுண்ணுயிரி (இ.எம்) என அழைக்கப்படுகிறது. இதை பாட்டில்களில் அடைத்து வைத்துக் கொள்ளலாம். தேவைக்கேற்ப தண்ணீரில் கலந்து பயன்படுத்தலாம்.

இ.எம் பயன்பாடு !

இ.எம்.. நீரின் கடினத்தன்மை, அமிலத்தன்மையை நீக்கும். கொசுக்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தும். சொட்டுநீர்க் குழாய் வழியாக இதைச் செலுத்தும் போது, குழாய்களில் படிந்துள்ள உப்பு நீக்கப்படும். குப்பை, கூளம் நிறைந்த இடங்கள், மாட்டுக்கொட்டகை, சாணக்குவியல் உள்ள இடங்களில் தெளித்தால், குப்பைகள், சாணம் போன்றவை சீக்கிரம் மட்கும். நீர்நிலைகளைச் சுத்திகரிப்பதற்கு, 200 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் இ.எம் கரைசலைக் கலந்து தெளிக்க வேண்டும். 10 லிட்டர் தண்ணீரில் 50 மில்லி கலந்தால் போதும்.

20 லிட்டர் இ.எம் தயாரிக்க, 500 ரூபாய்தான் செலவாகும். வெளிச்சந்தையில் ஒரு லிட்டர் இ.எம் 260 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதை விவசாயிகளே தயாரித்துப் பயன்படுத்தும்போது, செலவு குறைவதோடு, விளைச்சலும் நன்றாக இருக்கும். இதைச் செடிகளில் தெளிக்கும் போது, வளர்ச்சி நன்றாக இருக்கிறது. பூச்சி, நோய்த்தாக்குதல் குறைகிறது.

நன்றி

பசுமை விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Exit mobile version