Site icon Vivasayam | விவசாயம்

கறிவேப்பிலை (Murraya Koenigii)

சித்தர் பாடல்

வாயினருசி வயிற்றுளைச்ச னீடுசுரம்
பாயுகின்ற பித்தமென் பண்ணுங்கான் – தூய
மருவேறு காந்தளங்கை மாதே! உலகிற்
கறிவேப் பிலையருந்திக் காண்.
(அகத்தியர் குணபாடம்)

பொருள்:

ருசியின்மை, வயிற்றுப் பிரச்னை, காய்ச்சல், பித்த நோய்கள் போன்றவை தீரும்.

கறிவேப்பிலையின் தன்மை

உரமாக்கி = Tonic
பசித்தூண்டி = Stomachic

கறிவேப்பிலை தானே என்று நினைக்காதீர்கள். கறிவேப்பிலை சேர்த்த எந்த உணவும் உடலுக்கு மிகவும் நல்லது. உடலை இரும்புபோல் வலுவாக்கக்கூடிய சக்தி கறிவேப்பிலை உண்டு. கறிவேப்பிலையில் வைட்டமின் – ஏ, இரும்புச் சத்து இரண்டும் மிக அதிகமாக உள்ளன. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற கீரை இது. வாயுக் கோளாறுகள், ஜீரணக் குறைபாடு, கண்பார்வைக் கோளாறுகள் போன்றவற்றை முழுமையாக நீக்கும் சக்தி கொண்டது. கறிவேப்பிலையை தைலமாக தயார் செய்து தலைக்குத் தேய்த்து வந்தால் பித்த மயக்கம், தலைக் கிறுகிறுப்பு போன்றவை குணமாகும்.

கறிவேப்பிலையின் மருத்துவப் பயன்கள்:

கறிவேப்பிலையை உலர்த்தித் தூளாக்கி தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.

கறிவேப்பிலை, கரிசலாங்கண்ணி இரண்டையும் சம அளவு எடுத்து உலர்த்திப் பொடி செய்து, தினமும் காலை, மாலை இரு வேளையும் 5 கிராம் அளவு (ஒரு ஸ்பூன்) சாப்பிட்டால் தலைமுடி கருமையாகவும் அடர்த்தியாகவும் வளரும்.

கறிவேப்பிலையை உலர்த்தி கால் கிலோ அளவு எடுத்து பொடியாக்கி அதில் 25 கிராம் பெருங்காயத்தூள் சேர்த்து தினமும் உணவுக்குப் பிறகு 2 கிராம் அளவு சாப்பிட்டால் வாயுக்கோளறுகள் நீங்கும்.

உலர்ந்த கறிவேப்பிலை, உலர்ந்த நிலாவரை இரண்டையும் சம அளவு எடுத்துப் பொடியாக்கி, தினமும் இரவு உணவுக்குப் பிறகு ஒரு ஸ்பூன் அளவுக்குச் சாப்பிட்டால் பெருவயிறு மறையும். மலச்சிக்கலும் தீரும்.

உலர்ந்த கறிவேப்பிலை (கால் கிலோ), சுக்கு, மிளகு, சீரகம், உப்பு – தலா 10 கிராம் எடுத்து பொடி செய்து கொள்ளவும். தினமும் இதை, சூடான சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிட்டால், மந்தம், மலக்கட்டு, சர்க்கரை நோய் போன்றவை குணமாகும்.

கறிவேப்பிலையுடன் சுட்ட புள், வறுத்த உப்பு, வறித்த மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டால், பித்த வாந்தி, ஜீரணக் கோளாறுகள் போன்றவை சரியாகும்.

கை அளவு கறிவேப்பிலையை மூன்று மிளகு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் நல்ல பசி உண்டாகும்.

கறிவேப்பிலை, நாவல் மர இலை, கீழாநெல்லி மூன்றையும் விழுதாக அரைத்து பாலில் கலக்கிச் சாப்பிட்டு வந்தால், கல்லீரல் சார்ந்த பாதிப்புகள் குணமாகும்.

கறிவேப்பிலை, சுக்கு, வெந்தயம், மஞ்சள் ஆகியவற்றை இருவேளையும் உணவுக்குப் பிறகு 5 கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் மூட்டுவலி, வாத நோய்கள் நீங்கும்.

உலர்ந்த கறிவேப்பிலை, முந்திரிப் பருப்பு, நெல்லிமுள்ளி மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து பாலில் கலக்கிக் குடித்தால், இளைத்த உடல் பெருக்கும்.

கறிவேப்பிலையின் பிற பயன்கள்:

உடலுக்கு ஊட்டமும், வலிமையும் தரக்கூடிய சத்துக்கள் கறிவேப்பிலை நிறைய உள்ளன. உணவில் கறிவேப்பிலையை அடிக்கடி சேர்த்துச் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம்.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Exit mobile version