Skip to content

சுத்தமாக பால் கறப்பது எப்படி?

    பாலில் நமது உடலுக்குத் தேவையான எல்லா ஊட்டச் சத்துக்களும் சரியான விகிதத்தில் உள்ளன. எனவே பால் ஒரு சரிவிகித உணவு எனச் சொல்லலாம். அப்படிப்பட்ட பாலை நல்ல முறையில் அதன் சத்துக்கள் கெடாதவாறு உற்பத்தி செய்யப்பட வேண்டும்.

     அசுத்தமான சூழ்நிலையில் பால் உற்பத்தி செய்தால் பாலின் மூலம் காசநோய், தொண்டைப்புண், டிப்தீரியா, டைபாய்டு, வயிற்றுப் போக்கு முதலிய நோய்கள் வரக் கூடும். மேலும், பாலில் சேரும் கிருமிகள் பன்மடங்காகப் பெருகி பாலின் தரத்தையும் கெடுத்து விடும். பாலையும் நீண்ட நேரம் வைத்திருக்க முடியாது. ஏனெனில், கிருமிகள் வெகு விரைவாக வளர்வதற்கு பால் ஒரு நல்ல திரவப்பொருள், இவற்றைத் தவிர்க்க மாட்டுத் தொழுவத்தையும், கறவை மாடுகளையும் சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும்.

மாட்டுத் தொழுவமும் அதன் சுகாதாரமும்:

* மாட்டுத் தொழுவமானது சற்று உயரமான இடத்தில் தெற்கு வடக்காக இருக்குமாறு அமைத்தல் வேண்டும். இத்துடன் நல்ல சூரிய வெளிச்சமும், காற்றோட்டமும் இருக்க வேண்டும். மழை நீர், கழிவு நீர் ஆகியவை இயற்கையாக வழிந்தோட ஏற்ற முறையில் இருக்க வேண்டும்.

* மாட்டுத் தொழுவத்தின் தரையானது வழவழப்பற்ற கோடுகள் அடிக்கப்பட்ட சிமெண்டுடன் செங்கல் மற்றும் பாறைகளின் மேற்பகுதியை சொர சொரப்பாக்கிய பகுதிகள் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் தரை கழுவ வசதியாகவும், கழுவிய நீர் தேங்காமலும், வழுக்காமலும் இருக்கும். மேலும் தரையில் தொடர்பு கொள்ளும் மடி, காம்புகள் ஆகியவற்றை நுண்ணுயிரிகள் தாக்கா வண்ணம் பாதுகாக்கப்படும்.

* தொழுவங்களில் தீவனப் பாதை, தண்ணீர்த் தொட்டி, மாடு நிற்குமிடம், வடிகால் மற்றும் பால் கறவைப் பாதை ஆகியவை அமைத்திட வேண்டும். தீவனப் பாதையின் அகலம் 90 செ.மீ. தண்ணீர் தொட்டியின் அகலம் 20-30 செ.மீ அளவில் இருக்க வேண்டும். பால் கறவைப் பாதை அகலம் ஒற்றை வரிசையில் 90 செ.மீ – இரட்டை வரிசையில் 180 செ.மீ இருக்க வேண்டும். இரட்டை வரிசை தொழுவத்தில் மாடுகளின் தலை உள்பக்கம் நோக்கி இருக்குமாறு அமைப்பதை விட கட்டிடத்தில் வெளிப்பக்கம் இருக்குமாறு அமைத்தலே நல்லது. உள்பக்கம் நோக்கி இருந்தால் மாட்டின் முகத்தை நோக்கி இருப்பதால் நோய் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு பரவ வாய்ப்புகள் அதிகம்.

* கறவை மாட்டிற்கு முன்புறம் 1 மீட்டர் உயர சுவரும், 22 செ.மீ. இடைவெளியில் இரண்டு கம்பிகளும் பொருத்தப்பட்டால் போதுமானது. கூரையை தூண்கள் கொண்டு தாங்கச் செய்யவும். இவ்வாறுள்ள திறந்த வசதி நல்ல காற்றோட்டத்திற்கு உதவும். சுவரின் உட்புறம் சிமெண்ட் பூசப்பட்டு கழுவ வசதியாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் கூரையில் தொய்வு ஏற்பட்டு ஒழுக வாய்ப்புகள் உண்டாகும். கூரை வெளிப்பகுதியில் குறைந்தது 508 செ.மீ. வெளியே நீட்டி இருக்க வேண்டும். இதனால் மழைச்சாரல் உள்ளே வராமல் தடுக்க முடியும். நம் நாட்டில் பொதுவாக தொழுவங்கள் மண் தரையாகவும் உயரம் போதுமானதாக இல்லாமலும், கழிவு நீர் செல்ல வசதிகள் இல்லாமலும் இருக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில் சுத்தமான பாலைப் பெறுவதற்கு இயலாமல் போகிறது.

* தொழுவத்தில் தினசரி இரு முறை சாணத்தை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும். சாணம் சரிவர அகற்றப்படாவிடில் ஈ, கொசு போன்ற பூச்சி இனங்கள் பெருக வழி வகுக்கும்.

கறவை மாடுகளின் சுகாதாரமும், தூய்மையான பாலும்சில வழி முறைகள்:

* தொழுவம் சுத்தமாக இருந்தால் ஈ மற்றும் கொசுக்களினால் பரவக்கூடிய நுண்ணுயிர்கள் மற்றும் பாலை கெட்டுப் போகச் செய்யும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிடும். அதனால் கால்நடைகளின் மடி, காம்புகள், தொடை, தொடை இடுக்குகள் மற்றும் வாயில் ஒட்டிக் கொண்டிருக்கும் சாணத்தை நன்றாக கழுவி சுத்தப்படுத்த வேண்டும்.

* பால் கறக்கும் வேளையில் தொழுவத்தை சுத்தப்படுத்துவதோ, வைக்கோல் இடவோ கூடாது. பால் கறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே தொழுவத்தைக் கழுவி விட வேண்டும்.

* கறவை மாடுகளை சுத்தம் செய்த பின்னர் தகுந்த கிருமி நாசினி கொண்டு மீண்டும் சுத்தம் செய்ய வேண்டும். பின்பு தூய்மையான துணி கொண்டு மடிகளையும், காம்புகளையும் துடைத்து விட வேண்டும். அவ்வாறு செய்வதால் பாலில் நுண்ணுயிரிகளின் சேர்க்கை வெகுவாக குறைந்துவிடும்.

* பால் கறக்கும் பாத்திரங்களை சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவி பின்னர் 200 மி.கிராம் பிளீச்சிங் பவுடரை ஒரு லிட்டர் சுத்தமான தண்ணீர் கொண்டு தயாரிக்கப்பட்ட திரவத்தால் நன்கு கழுவி, வெயிலில் உலர்த்தி பின்பு பால் கறக்கப் பயன்படுத்துதல் மிகவும் அவசியமாகும். இவ்வாறு செய்வதன் மூலம் பாத்திரங்களில் உள்ள பாலும் தூய்மையாக இருக்கும்.

* பால் கறப்பவர்கள் எந்தவித நோயின் அறிகுறிகளும் இல்லாமல் இருக்க வேண்டும். பால் கறக்கும்போது புகை பிடிப்பதோ, எச்சில் துப்புவதோ, இருமுவதோ கண்டிப்பாக கூடாது. விரல் நகங்கள் வெட்டப்பட்டு பால் கறக்கும் முன் கைகளை சோப்புப் போட்டு நன்றாக கழுவி துணி கொண்டு துடைத்த பின்னரே பால் கறக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் பால் கறப்பவர்களின் மூலமாக பாலுக்குள் செல்லும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை குறைகிறது.

* பால் கறக்கும்போது எல்லா காம்புகளிலும் உள்ள முதல் பாலை தரையில் பீய்ச்சி விட்டு பின்னர் பால் கறக்கும் பாத்திரத்தில் சேர்க்க வேண்டும். இவ்வாறு செய்வதால் எதிர்பாராதவிதமாக பால் காம்புகளில் நுழைந்துள்ள கிருமிகள் பாலில் சேராமல் தடுக்கப்படுகின்றது.

* பால் கறக்கும்போது சில கறவை மாடுகள் வாலை வீசும் தன்மை கொண்டவைகளாக இருக்கும். அப்போது வாலை தொடை இடுக்கில் சிக்க வைத்து விட்டால் தொந்தரவுகள் இல்லாமல் பால் கறக்க முடியும்.

* பால் கறக்கும் பாத்திரமானது மேலே வாய் குறுகியும், கீழே அகன்றும் உள்ள எவர்சில்வர் மற்றும் அலுமினியத்தாலான பாத்திரங்களை பயன்படுத்த வேண்டும். அப்படி இருந்தால் காற்றினால் பாலுக்குள் சேரும் நுண்ணுயிரிகள் தடுக்கப் படுகின்றன.

* பால் கறக்கும் இடத்தை வாரத்திற்கு இரு முறை தகுந்த கிருமி நாசினிகள் மற்றும் சுண்ணாம்பு கொண்டு சுத்தப்படுத்துவதன் மூலம் பால் கறக்கும் இடத்தை சுகாதாரமாக வைத்துக் கொள்ளலாம்.

* பால் கறந்தவுடன் உடனடியாக சுத்தமான, மெல்லிய, உலர்ந்த துணி கொண்டு வடிகட்ட வேண்டும். அவ்வாறு செய்வதால் பாலில் சேர்ந்த தூசி, முடி ஆகியவை நீக்கப்பட்டுவிடும்.

* கறந்த பாலை உடனடியாக 10 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அல்லது அதற்குக் குறைந்த வெப்பநிலைக்கு குளிர வைக்க வேண்டும். அப்படிச் செய்வதால் பாலில் உள்ள நுண்ணுயிரிகள் மேலும் வளராமல் தடுக்கப்படுகின்றன. இல்லையெனில் பால் விரைவில் கெட்டுப் போய்விடும்.

* பால் கறவை இயந்திரம் உபயோகிப்போர் இயந்திரத்தின் மடி கறவைப் பகுதியை தினசரி சுத்தப்படுத்தி பராமரிக்க வேண்டும்.

தொடர்புக்கு : கால்நடைத் துறையை அணுகவும்.

1 thought on “சுத்தமாக பால் கறப்பது எப்படி?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news