Skip to content

குதிரைவாலி தோற்றமும் பண்பும்..!

இது புஞ்சை, நஞ்சை நிலங்களில் வளரும் சொரசொரப்புத் தன்மையுடைய ஓராண்டு புல்லினப் பயிராகும். இதன் பூர்விகம் தெளிவாகக் கூறப்படாவிட்டாலும், இது வெப்ப மண்டலம் மற்றும் துணை வெப்பமண்டலப் பகுதிகள், சதுப்பு நிலங்கள், நீர்நிலைகள், சாலையோகரங்கள், வெப்பமான மலைப்பகுதிகள், வெப்பம் அதிகமாகக் காணப்படும் உலகின் பல பகுதிகளிலும் வளரக்கூடியது என்பதால் ஐரோப்பா மற்றும் ஆசியாவினுடைய பகுதியைச் சார்ந்ததாகக் கூறப்படுகிறது.

உலகளவில் Echinochloa தாவரத்தை உள்ளடக்கிய பிறவியில் (Genus) சுமார் 49 தாவரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவைகளில் 38 மட்டும் தாவரவியல் பெயர்களுடன் சரியாக அடையாளம் காட்டப்பட்டுள்ளன. இந்தியாவில் 7 தாவரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அவை

Echinochloa colona (L) Link – சீமை குதிரைவாலி
Echinochloa crus-galli (L) P.Beauv – தானிய குதிரைவாலி
Echinochloa frumentacea Link – மாவு குதிரைவாலி
Echinochloa oryzoides Fritsch – நெல்சக்களத்தி குதிரைவாலி
Echinochloa picta K.D.Koenig – சித்திரக் குதிரைவாலி
Echinochloa pyramidalis Lam – கூம்புக் குதிரைவாலி
Echinochloa stagnina (Retz) P.Beauv – மலட்டுக் குதிரைவாலி

இவைகளில் நாட்டு (புல்லரிசி) குதிரைவாலி (Echinochloa crusgalli) மட்டுமே நமது பாரம்பரிய சிறுதானியப் பயிராகும். நல்விதைத் தேர்வு மூலம் சில இரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு விவசாயத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. உற்பத்தியைப் பெருக்குவதற்காக உரம் இடப்பட்டுப் பயிரிடப்படுகின்றன. இவை அங்கக-இயற்கை (Organic) குதிரைவாலி இரகங்களாகக் கருத முடியாது. தற்போது கடைகளில் விற்கப்படும் குதிரைவாலி இரகங்கள் கலப்பினக் குதிரைவாலி இரகங்கள் ஆகும். ஆகையால் நாட்டுக்குதிரைவாலி (Echinochlo crus-galli) என்ற இரகத்தை மட்டும் கேட்டுவாங்கிப் பயன்படுத்த வேண்டும். இத்தகைய நாட்டுக்குதிரைவாலி இரகத்திற்கு உரம் பூச்சி மருந்து இடுவதில்லை. வறண்ட நிலங்களில் குறைந்த அளவு விளைச்சலுடன் இவை பயிர்செய்யப்படுகின்றன.

இது ஒருவித்திலைத் தாவரத் தலைமுறையில் (MONOCOTYLEDONAE) உமிச்செதில் குலத்தில் (GLUMACEAE) புல்குடில் (POACEAE) சேர்க்கப்பட்ட பிறவி (Echinochloa) பெயராகும். பறவையினத்தின் இறகுகளுடன் ஒப்பிடும் படியான தாவர வகையைச் சேர்ந்ததென்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Echinochloa
Digitaria, Ischaemum, Milium, Oplismenus, Orthopogon, Panicum, pennisetum போன்ற பிறவிகளை ஒருங்கிணைத்து ஒரே பிறவியாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

Echinochloa – Genus = குதிரைவாலி – பிறவி
Ek-ih-NOK-loh-uh என்று பிரித்து உச்சரிக்கப்பட வேண்டும்.
கிரேக்கச் சொல்லான இச்சிநோஸ்-ல் (echinos-முள்ளம் பன்றி) என்ற பொருள்படவும்,

Chloa – நம்ப முடியாத மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது என்ற இரண்டு பொருட்களையும் இணைந்துக் கூறப்பட்டுள்ளது.

வெப்பமான பகுதிகளில் ஆண்டு முழுவதும் அல்லது தொடர்ந்து பல்லாண்டு தானாகத் தோன்றி வாழ்கின்ற மிகவும் ஆச்சரியமான சதைப் பற்றான புல் இனத் தாவரம் என்பதால் இந்தவகைத் தாவரங்களுக்கு இப்பிறவிப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Crus-galli – Species epithet = தானியம் – பெயர் வழி
Krus GAL-ee என்று பிரித்து உச்சரிக்கப்பட வேண்டும்.

சேவல் துள்ளுவது போல் துருத்திக் கொண்டு வளர்கின்ற தாவரம் என்ற பொருள்படப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Echinochloa crus-galli

முள்ளம் பன்றி போல் தாவரம் முழுவதும் சிறுசிறு முட்களுடனும், நம்பமுடியாத ஆச்சரியத்துடனும் சேவல் துள்ளுவது போல் துருத்திக் கொண்டு வளர்கின்ற தாவரம் எனப் பொருள்பட தாவரவியல் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஆங்கிலப் பெயர்

Horse-tail millet – குதிரைவால் போன்ற கதிர்களை உடையது;
Barnyard millet – கொல்லைப்புறத்தில் விளைந்து தொழுவத்தில் இடப்படும் என்ற பொருள்பட;
Sanwa millet, Sanwa என்ற இந்தி பெயரை ஆங்கிலப் பொதுப்பெயராக அழைக்கப்படுகிறது.

இத்தானியத்தில் நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை உள்ளன. இந்தப் புன்செய்ப் பயிரை 90 நாட்களில் மானாவாரியாகப் பயிரிட்டு அறுவடை செய்யலாம்.

தமிழ்ப் பெயர்

குதிரைவாலி – இதனது கதிர்கள் குதிரையின் வால் போன்று காட்சியளிப்பதால் இது குதிரைவாலி எனப் பழந்தமிழர்களால் அழைக்கப்பட்டது.

வாலரிசி – இதனுடைய தானியத்தின் ஒரு பகுதி வால் போன்று இருப்பதால் சங்க இலக்கியங்களில் இதை வாலரிசி என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கோவை மற்றும் கோவில்பட்டித் தானிய ஆராய்ச்சி நிலையங்களில் மானாவாரிக்கு ஏற்ற வகையிலும், நீர்ப்பாசனத்துக்கு ஏற்ற வகையிலும் இரகங்களாக K1, Co 1, Co(Kv)2 போன்ற இரகங்களும் உருவாக்கப்பட்டன. அவை உயர் விளைச்சலைத் தரக்கூடிய இரகங்களாகவும், குறுகிய காலப் பயிராகவும், கீழே மடியாத இரகங்களாகவும், வறட்சியைத் தாங்கக் கூடிய இரகங்களாகவும், கால்நடைத் தீவனம் அதிகமாகத் தரக்கூடிய இரகங்களாகவும், உருவாக்கித் தரப்பட்டுள்ளன. குறிப்பாக Echinochloa frumentacea என்ற கோயம்புத்தூர் பகுதியில் விளையும் இரகத்திலிருந்து விளைச்சல் காலங்களில் அதிக மணிகளைத் தரக்கூடிய பயிர்களைத் தேர்ந்தெடுத்து அதிலிருந்து எடுத்த நல் விதைத் தேர்வு மூலம் (Pureline selection) (கூம்பு கோமாரி – Echinochloa pyramidalis) பெறப்பட்டுள்ளது. இதுதான் குதிரைவாலியாக விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது குதிரைவாலி விளைச்சலைப் பெருக்குவதற்காகச் சர்வதேச மிதமான வறண்ட வெப்பமண்டலச் சிறுதானிய ஆராய்ச்சி நிலைய (ICRISAT) விதைச் சேமிப்பு வங்கியில் 9 நாடுகளில் இருந்து 743 குதிரைவாலி விதைகளைச் சேகரித்து ஆராய்ச்சி செய்து வருகின்றார்கள்.

குதிரைவாலியில் மானாவாரியில் சாகுபடி செய்யும் தானியங்கள் மட்டுமே உரம் பூச்சி மருந்து இடாத குதிரைவாலி இரகங்கள் ஆகும். இத்தகைய நாட்டுக் குதிரைவாலிக்கு உரம் பூச்சி மருந்து இடுவதில்லை.

வறண்ட நிலங்களில் குறைந்த அளவு விளைச்சலுடன் இவைகள் பயிர்செய்யப்படுகின்றன. நீர்ப்பாசனத்தில் சாகுபடி செய்யும் குதிரைவாலிகள் உரமிட்டு வளர்ப்பதாகும். எனவே இவைகளை அங்கக இயற்கைக் (Organic) குதிரைவாலி இரங்களாகக் கருதமுடியாது.

குதிரைவாலி (Echinochloa crus-galli) என்ற இரகத்தை மட்டுமே கேட்டு வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.

நன்றி

இரா.பஞ்சவர்ணம்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj